Thursday 5 June 2014

8/1 dra speech

ambedkar- 400மநு கலப்புத் திருமணத்தை எதிர்ப்பவர். ஒவ்வொரு வர்ணமும் தனக்குள்ளேயே மணம்புரிய வேண்டும் என்று கட்டளையிட்டவர். ஆனால், குறிப்பிட்ட வர்ணத்திற்கு வெளியே நடக்கும் திருமணத்தை மநு அங்கீகரிக்கிறார். குறிப்பிட்ட வர்க்கத்திற்கு வெளியே நடக்கும் திருமணத்தையும் நிபந்தனையுடன் அனுமதிக்கிறார். அடிமை முறையைப் போல கலப்புத் திருமண முறையையும் அங்கீகரிக்கிறார். ஆனால், படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாட்டிற்கு கேடு விளைவிக்காத வகையில் கலப்புத் திருமணத்தை அங்கீகரிப்பது அடிமை முறையைப் போல, தலைகீழ் வரிசையில் அல்ல.
ஒரு பிராமணர் எந்த வர்ணப் பெண்ணையும் மணக்கலாம். சத்திரியன் தன் வர்ணத்தினரையும் தனக்கு கீழ் வர்ணமான வைசிய, சூத்திர வர்ணங்களிலும் பெண் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவனுக்கு மேலே உள்ள பிராமணப் பெண்ணை அவன் மணக்கக் கூடாது. வைசியன் தன் வகுப்பிலும் சூத்திர சாதியிலும் பெண் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சத்திரிய, பிராமணப் பெண்களை மணமுடிப்பது தடை செய்யப்படுகிறது.
சட்டத்தின் ஆட்சி, மநு கூறும் மூன்றாம் விளக்கமாக அமைந்துள்ளது. முதலில் சாட்சிகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். மநுமுறைப்படி அவர்களுக்குப் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் செய்வித்தல் வேண்டும்...
இந்து சட்ட முறைகளுக்கும் இந்து அல்லாத சட்ட முறைகளுக்கும் இடையிலும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன! குற்றவியல் சட்டத்தில் சமமின்மை ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது! நீதிமுறைப்படி அமைந்த குற்றவியல் சட்டத்தில், இரு கூறுகளை நாம் காணலாம். குற்றத்தின் இலக்கணத்தை வகுப்பது ஒரு பிரிவு; அதை மீறுவோருக்கு அறிவுக்குப் பொருத்தமான தண்டனை விதிப்பது மற்றொரு பிரிவு.
எல்லா குற்றவாளிகளுக்கும் ஒரே விதமான தண்டனையே. ஆனால் மநுவிடம் நாம் காண்பது என்ன? அறிவுக்குப் பொருத்தமற்ற தண்டனை முறை. குற்றத்துடன் தொடர்புடைய வகையில் உறுப்புகளைத் தண்டித்தல் – வயிறு, நாக்கு, மூக்கு, கண், காது, பிறப்பு உறுப்புகள் போன்றவற்றிற்குத் தனிமனம் உண்டு என்பது போலவும் அவை உடலோடு உடன் வாழ்வன அல்ல என்பது போலவும் கருதி மநு தண்டனை அளிக்கிறார்.
மநுவின் குற்றவியல் சட்டத்தின் இரண்டாம் கூறு, குற்றத்தின் கடுமையை மீறிய, மனிதத் தன்மையற்ற தண்டனை அளித்தல். மநுவின் குற்றவியல் சட்டத்தின் மிக வெளிப்படையான கூறு, ஒரே விதமான குற்றத்திற்குப் பல சமமற்ற தண்டனைகளை விதித்தல் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமின்றி, நீதி கேட்டு மன்றத்திற்கு வருபவர்களில் – திட்டமிட்டே சிலருடைய கண்ணியம் காக்கப்படும்; சிலர் அவமானப்படுத்தப்படுவர். மநுவின் செயல் திட்டத்தின் அடிப்படையான சமூகச் சமமின்மையை நிலைநாட்டுவதே இதன் நோக்கம்.
படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மை என்னும் கோட்பாடு, பொருளாதாரத் துறைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. திறமைக்கேற்றவாறு உழைக்கும் ஒவ்வொருவருக்கும் அவருடைய உழைப்புக்கும் தேவைக்கும் ஏற்ப ஊதியம் அளிப்பது என்ற கோட்பாடு இந்து சமூகத்தில் இல்லை. ஒவ்வொருவரின் தேவைக்கேற்றபடி உழைப்பைப் பெற்றுக் கொள்வது; ஆனால், உயர் வர்ணத்திற்கு ஏற்றவண்ணம் ஊதியம் அளிப்பது என்பதே இந்து சமூக அமைப்பின் கோட்பாடு.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை ஓர் அலுவலர் விநியோகிப்பதாகக் கொள்வோம். தாழ்ந்த வர்ணத்தாரைவிட உயர் வர்ணத்தாருக்கு அதிகம் கொடுக்க வேண்டியது அலுவலரின் கடமையாகிறது. ஓர் அலுவலர் வரி விதிப்பதாகக் கொள்வோம். உயர் வர்ணத்தாருக்குக் குறைந்த வரியும், தாழ்ந்த வர்ணத்தாருக்கு அதிக வரியும் அலுவலர் விதித்தல் வேண்டும்.
இந்து சமூக அமைப்பு, சமதேவை, சமபணி, சமதிறமையின் அடிப்படையில் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை அங்கீகரிப்பதில்லை. அதன் கோட்பாட்டுப்படி, வாழ்க்கையில் நல்ல வசதிகளை உயர் வர்ணத்தாரே பெறவேண்டும். குறைந்த, மோசமானவற்றைக் கீழ் வர்ணத்தாரே அனுபவிக்க வேண்டும் என்பதே.
படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாடு இந்து சமூகத்தின் அடிப்படை என்பதற்கு மேலும் சான்றுகள் காட்டத் தேவையில்லை. சமூக வாழ்வின் எல்லா துறைகளிலும் இக்கோட்பாடு ஆட்சி செலுத்துகிறது. சமத்துவத்திற்கு எதிராக சமூக நிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
– தொடரும்
 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 108
-0-

2.படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையே வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஆட்சி புரிகிறது - VII

படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாடுதான் அடிப்படையானது என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. நான்கு வர்ணங்களும் வேறுபட்ட ஆனால் சமமான படுக்கைக் கோட்டில் அமைந்தவை அல்ல; அவை செங்குத்துக் கோட்டில் அமைந்தவை. மநுவின் திட்டப்படி, பார்ப்பனன் முதலிடம் வகிக்கிறான். அவனுக்குக் கீழ் சத்திரியனும், சத்திரியனுக்குக் கீழ் வைசியனும், வைசியனுக்குக் கீழ் சூத்திரனும், சூத்திரனுக்குக் கீழ் ஆதிசூத்திரன் அல்லது தீண்டத்தகாதவனும் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வரிசை முறை மரபு சார்ந்தது மட்டுமன்று; ஆன்மிக, அற, சட்ட அடிப்படையிலும் அமைந்தது. வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் இந்த படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையே ஆட்சி செலுத்துகிறது.
ambedkar 324மநுஸ்மிருதியிலிருந்து பல விளக்கங்களைக் காட்டி இதனை மெய்ப்பிக்க முடியும். இக்கருத்தை விளக்கிட நான்கு எடுத்துக்காட்டுகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்: அடிமைச் சாசனம், திருமண விதிகள், தண்டனைச் சட்டம், துறவறம், சமஸ்காரம் பற்றிய விதிகள். இந்து சட்டம் அடிமைத் தனத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. மநுஸ்மிருதி ஏழுவகை அடிமைகளைக் குறிப்பிடுகிறது. நாரதஸ்மிருதி பதினைந்து வகை அடிமைகளைக் குறிப்பிடுகிறது. எத்தனை வகை அடிமைகள், அடிமைகளை எவ்வாறு வகைப்படுத்தினர் என்பது முக்கியமல்ல; யார் யாரை அடிமைப்படுத்த முடியும் என்பதுதான் முக்கியம். 
இது பற்றிய நாரதஸ்மிருதியும் யாக்ஞவல்கியஸ்மிருதி கூறுவதையும் காண்போம். நாரதஸ்மிருதி: 5:39: நான்கு வர்ணங்களின் தலைகீழ் முறையில் அடிமை முறை விதிக்கப்படவில்லை. தன் வர்ண ஆச்சாரத்தை மீறினாலொழிய, அவ்வகை அடிமை முறை மனைவியின் நிலைக்கு ஒப்பானது. யாக்ஞவல்கிய ஸ்மிருதி 16. 183(2) அடிமை முறை என்பது வர்ணங்களின் இறங்குமுக வரிசைதானே தவிர, ஏறுமுக வரிசையில் அல்ல.
அடிமைமுறை அங்கீகாரமே மோசமானதுதான். அடிமை முறையைத் தன்போக்கில் விட்டிருந்தால்கூட, ஓரளவு சமநிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அது சாதியமைப்பின் அடிப்படையையே தகர்த்திருக்கக் கூடும். அடிமை முறையில் பார்ப்பனன் தீண்டத்தகாதவனின் அடிமையாகவும், தீண்டத்தகாதவன் முதலாளியாகவும் மாறும் வாய்ப்பு உண்டு. கட்டற்ற அடிமை முறையிலும் ஒருவகை சமத்துவப் போக்கு இருப்பதால், அதனையும் அழித்திடத் திட்டமிட்டனர். மநுவும் அவருடைய வழித் தோன்றல்களும் அடிமை முறையை அங்கீகரித்து, அதனை வர்ணமுறையின் தலைகீழ் வரிசையில் இருக்க அனுமதிக்கவில்லை. அதன் பொருள் ஒரு பார்ப்பனர் மற்றொரு பார்ப்பனருக்கு அடிமையாக மாற முடியுமே தவிர, பிறருக்கு சத்திரிய, வைசிய, சூத்திரருக்கு அல்லது ஆதி சூத்திரருக்கு அடிமையாக முடியாது. 
மறுபுறம், பார்ப்பனர் நான்கு வர்ணத்தாரையும் அடிமைப்படுத்த முடியும். சத்திரியன் பார்ப்பனனை அடிமை கொள்ள முடியாது; சத்திரிய, வைசிய, சூத்ர, ஆதி சூத்திரரைத்தான் அடிமை கொள்ள முடியும். வைசியன் பார்ப்பனனையும் சத்திரியனையும் அடிமை கொள்ள முடியாது; வைசிய, சூத்திர, ஆதி சூத்திரரைத்தான் அடிமை கொள்ள முடியும். சூத்திரன் சூத்திர, ஆதி சூத்திரரைத்தான் அடிமை கொள்ள முடியும்; பார்ப்பன, சத்திரிய, வைசியரை அடிமை கொள்ள முடியாது. ஆதி சூத்திரன் ஆதி சூத்திரனைத்தான் அடிமை கொள்ள முடியும்; பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திரனை அடிமை கொள்ள முடியாது.
படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாட்டின் விளக்கத்தை மநுஸ்மிருதியில் திருமணம் பற்றிய விதிகளில் காணலாம். மநு கூறுகிறார்:
3:12. “இருபிறப்பாளர் வர்ணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணம் செய்துகொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. மீண்டும் திருமணம் செய்து கொள்ள விருப்பமுடையவர் வர்ணமுறையில் நேர்வரிசையில் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.''
3:13. “சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும். வைசியனுக்கு வைசிய, சூத்திரப் பெண்; சத்திரியனுக்குச் சத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்கள்; பார்ப்பனனுக்குப் பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்கள்.''
– தொடரும்
-0-

3.பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை இந்து ஆன்மிகம் ஏற்க மறுக்கிறது – VI

"பல சாதிகளில் உயர்மணம் திருமண விதிகளில் முக்கிய திருத்தத்தை ஏற்கச் செய்கிறது. உயர் மணம் நடைமுறையில் இருப்பின், மண உறவு கொள்ளத்தக்க குழுக்கள் சமூக அந்தஸ்து முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. மேல் சாதியினர் கீழ்சாதியில் பெண் எடுப்பார்கள். ஆனால், பெண் கொடுக்க மாட்டார்கள். ராஜபுத்திரர்களிடையே இவ்விதி பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. வேறு பல சாதிகளிலும் பின்பற்றப்படுகிறது. அனைத்து இந்துக்களிடையேயும் உயர்மணம் செய்யும் போக்கு காணப்படுகிறது'' என்கிறார் பிளன்ட்.
"உயர்மூலம்' "உயர்மணம்' பற்றிய விதிமுறைகளிலிருந்து அறியப்படுவது என்ன? எல்லா சாதிகளிலும் உயர்வு, தாழ்வு உணர்வு மேலோங்கி இருப்பதே  வெளிப்படுகிறது. இவ்வுணர்வு இல்லாத சாதிகளே இல்லை. இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றின் மேல் மற்றொன்று என அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலே உள்ள வகுப்பினரை அவர்கள் வெறுக்கிறார்கள்; தமக்குக் கீழே இருப்பவர்களை அவர்கள் அவமதிக்கிறார்கள்.
ஒவ்வொரு சாதியும் பிற சாதியினரை இழிவு படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கியுள்ள பழமொழிகளின் மூலம் சாதி உணர்வு வெளிப்படுகிறது. மேல் சாதியினருக்கு இழிவான மூலத்தை கற்பிக்கும் நூல்களை எழுதிய கீழ் சாதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தோன்றியுள்ளனர். "சாகியாத்திரி காண்டம்' இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும். அது, இந்து புராண புனித இலக்கிய வகையைச் சார்ந்தது. எனினும் வழக்கமான புராணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாணியில் அது இயற்றப்பட்டுள்ளது. பல்வேறு சாதிகளின் மூலவர்களைப் பற்றி அது விளக்குகிறது. பார்ப்பனர்களுக்கு அசிங்கமான மூலத்தையும், பிற சாதியினருக்கு விழுமிய மூலத்தையும் அது கற்பிக்கிறது.
இந்து சமூக அமைப்பு சமத்துவத்தை ஏற்கிறதா? இல்லை. "பிறப்பால் அனைவரும் சமம்' என்றாலும் இக்கோட்பாடு இந்த சமூக அமைப்பிற்குப் புறம்பானதாக உள்ளது. இக்கொள்கை தவறானது என்பது அதன் ஆன்மிக அடிப்படையும் ஆகும். உலகத்தை உருவாக்கிய பிரஜாபதியின்  குழந்தைகளே அனைவரும் என்றாலும், அனைவரும் சமமானவர்கள் அல்லர். பிரஜாபதியின் வெவ்வேறு பாகங்களிலிருந்து மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர். பார்ப்பனர்கள் வாயிலிருந்தும், சத்திரியர் தோளிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் பாதத்திலிருந்தும் படைக்கப்பட்டுள்ளனர். 
படைப்புக் கடவுளின் வெவ்வேறு உறுப்புகளிலிருந்து மனிதர்கள் படைக்கப்பட்டிருப்பதால், மனிதர்கள் சமமாகப் படைக்கப்படவில்லை. இக்கோட்பாட்டிற்கு உயிரியல் அடிப்படை இருக்கிறதா என்பது பற்றியும் இந்து சமூகம் கவலைப்படவில்லை. இது உண்மை இல்லையென்றால் குணத்திலும் இயற்கைத் திறன்களிலும் மனிதர்கள் வேறுபடுகின்றனர் என்பது, அவ்வளவுக்கவ்வளவு சரிதான். மாற்றாக, இது உண்மை என்றால், மனிதர் குணத்திலும் இயற்கைத்திறனிலும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்றால், அக்கொள்கைக்கு கேடு உண்டாகும். 
கோட்பாட்டின் உண்மை பற்றியும் இந்து சமூகம் அக்கறை கொள்ளவில்லை. அதனை அறக் கோட்பாடாகக் காணும் அக்கறையும் அதற்கு இல்லை. குணாம்சத்திலும் திறமைகளிலும் எவ்வளவு வேறுபட்டாலும் மனிதன் என்ற வகையில் அனைத்து மனிதர்களும் மரியாதைக்குரியவர்கள் என்பதை ஏற்க இந்து சமூக அமைப்பு மறுக்கிறது; மனிதர்களுக்குள்ள ஆற்றல் குறைவோ, மிகுதியோ அவரவர் திறமைகளை முற்றிலும் வளர்த்து பயன்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குவது சமூகத் திட்டமாக இருக்க வேண்டும் என்னும் கருத்தையும் அது மறுக்கிறது. நிறுவனங்களில், வாழ்க்கை முறையில், சூழ்நிலைகள் சமத்துவத்தை அனுமதிப்பதில்லை; சமத்துவ உணர்வுக்கு அது எதிரானது.
சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் இந்து சமூகம் அமைந்திருக்கவில்லை. வேறு எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அது அமைந்திருக்கிறது? இக்கேள்விக்கு ஒரே ஒரு பதிலைத்தான் கூற முடியும். அந்த அடிப்படைகளை உணர்ந்திட இயலுமாயினும், அவற்றின் தன்மை இந்து சமூகத்தில் ஏற்படுத்திய விளைவு பற்றி அய்யம் இருக்க முடியாது. இந்து சமூக அமைப்பு மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் முதலாவதும் முதன்மையானதும் வரிசைப் படுத்தப்பட்ட சமமின்மையே!
– தொடரும்
-0-

4.பார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள்

என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; இரண்டு முதலாளியம். பார்ப்பனியம் எனும் எதிரியை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லும் போது என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில், அதிகாரங்கள், உரிமைகள், நலன்கள் பெறுவதை மட்டும் நான் பார்ப்பனியம் என்று குறிப்பிடவில்லை. அந்த அர்த்தத்தில் நான் பார்ப்பனியம் என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்லுகின்றேன்.
இந்த எதிர்மறை உணர்வு எல்லா வகுப்பினரிடை யேயும் உள்ளது. பார்ப்பனர்களோடு மட்டும் அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் தாம் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. இந்தப் பார்ப்பனியம் எங்கும் பரவி, எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம் சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது. மற்ற வகுப்புகளுக்குச் சம வாய்ப்புகளை மறுக்கிறது.
இந்தப் பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளோடு நின்றுவிடுவதில்லை. அப்படி நின்றிருந்தால் யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவ்வாறு அது நிற்கவில்லை. சிவில் உரிமைகளையும் அது பதம் பார்க்கிறது. பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்த கங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்பானவை. பொது மக்களுக்காகப் பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால் இந்தக் குடிமை உரிமைகள் இலட்சக் கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது பார்ப் பனியத்தின் விளைவு அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டு களாக அவிழ்த்துவிடப்பட்ட இந்த அடக்குமுறை இன்னும் உயிரோட்டமுள்ள மின் ஆற்றலாக ஓடிக்கொண்டிருக்க வில்லையா?
பொருளாதார வாய்ப்புகளைக் கூடப் பாதிக்கும் அளவுக்கு அத்தனை சர்வவல்லமை வாய்ந்ததாகப் பார்ப்பனியம் விளங்குகிறது. ஓர் ஒடுக்கப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளைப் பிற தொழிலாளியின் வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப்பாதுகாப்பு, பணி முன்னேற்றம் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள் என்ன? தீண்டத்தகாதவன் என்பதால் அவனுக்கு எத்தனையோ வேலை வாய்ப்புகள் மூடப்பட்டுவிடுகின்றன. மிகச் சிறந்த எடுத்துக்காட்டு பருத்தித் தொழில்.
பம்பாய் மாகாணத்தில், பம்பாயிலும் சரி - அகமதா பாத்திலும் சரி, பருத்தி ஆலைகளில் நெசவுத் துறையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை அனுமதிப்பதில்லை. ஒடுக்கப்பட்ட வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய முடியும். நூற்புத் துறையில் - பஞ்சாலைகளில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில் தீண்டப்படாதவர்களுக்கு வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறதென்றால், அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான். ஒரு சாதி இந்து முசுலீம்களோடு பணிபுரிவதில் எந்தச் சுணக்கமும் காட்டுவதில்லை. ஆனால் தீண்டத் தகாதோர் என்றால் எதிர்ப்பு காட்டுகிறான்.
இரயில்வே துறையை எடுத்துக் கொள்ளுங்கள். இரயில் வேயில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? ஒடுக்கப் பட்டவன் ஒரு கேங்க் மேனாகத்தான் பணிபுரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முழுவதும் எவ்வித உயர்வும் இல்லாமல் கேங்க் மேனாகவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்குப் பதவி உயர்வு எதுவும் தரப்படுவ தில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்ட ராக வர வேண்டுமானால் ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே ஒடுக்கப்பட்ட தொழிலாளி போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை விரும்பமாட்டார். எனவே ஒடுக்கப்பட்ட வகுப்பினர் போர்ட்ட ராக நியமிக்கப்படுவதில்லை.
எனக்கும் உங்களுக்கும் தீயநோக்கத்தைக் கற்பிப்ப வர்களுக்கு இரண்டு கேள்விகள். இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே சொன்னவையெல்லாம் உண்மையான குறைபாடுகள் தானே? உண்மையான குறைபாடுகள் என்றால் அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும் எதிர்மறையாகப் பதில் சொல்ல முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு தொழி லாளர் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த மான இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு நாம் பெரிய உந்துசக்தியாக இருக்க முடியும். எனவே நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர் தலைவர்கள் ஏதோ ஒருவித பிரமையில் இருக்கிறார்கள். அவர்கள் காரல்மார்க்சைப் படித்தவர்கள். உடைமை வர்க்கம், தொழிலாளர் வர்க்கம் என இரண்டு வர்க்கம் மட்டுமே உண்டு என்பவர்கள். “இந்தியாவிலும் இரண்டு வர்க்கம் தான் - ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பது” என்று கருதுபவர்கள். இந்த விசயத்தில் அவர்கள் இரண்டு தவறுகள் செய்கிறார்கள்.
மார்க்சு சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல், மெய்ம்மை என நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. இரு வர்க்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தினால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. உடைமை வர்க்கம், இல்லாத வர்க்கம் என்னும் பிரிவினை உணர்வு இந்தியாவில் சாதிப் பிரி வினைகள் காரணமாக உண்டாகவில்லை. எல்லாத் தொழி லாளர்களும் ஒன்று - ஒரே வர்க்கம் என்பது இலட்சியம். அது அடையப்பட வேண்டிய இலட்சியமேயாகும். ஆனால் அதுவே இருக்கிற யதார்த்தம் என்று முடிவு செய்து கொள்வது தவறு. பிறகு எப்படித் தொழிலாளர்களை அணித் திரட்ட முடியும்?
ஒரு பிரிவுத் தொழிலாளர்கள், இன்னொரு பிரிவுத் தொழிலாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம் அவர் களிடையே ஒற்றுமையை உருவாக்க முடியும். ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரிவினரைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. ஒற்றுமையைக் கொண்டுவர ஒரே வழி ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளிக்கு இனம், மதம் ஆகிய பின்னணியில் பகைமைக் கொள்வதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களைவதன் மூலம், அத்தகைய ஒற்றுமையை அவர்களிடையே கொண்டுவர முடியும். தொழிலாளர்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவரச் சிறந்த வழி என்னவென்றால், ஒரு தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தரவிரும்பாத உரிமைகளை அவன் மட்டும் பெறவேண்டும் என்பது தவறான சிந்தனை என்று அவனுக்கு எடுத்துச் சொல்வதுதான். தமக்கிடையே உள்ள சமூக வேறுபாடுகளுக்கு அழுத்தம் தரும் போக்கு தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்பதைத் தொழிலாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
சுருங்கச் சொன்னால் சமத்துவமின்மை என்னும் குணாம்சத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து அடியோடு களைந்தெறிய வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர் யார்?
முதலாளித்துவத்துக்கு எதிராக ஆவேசமாகப் பேசும் தொழிலாளர் தலைவர்களை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பார்ப்பனியத்திற்கு எதிராக எவரும் பேசியதாகத் தெரியவில்லை. இந்த விசயத்தில் அவர்கள் சாதிக்கும் மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு வேளை தொழிலாளர் ஒற்றுமைக்கும் பார்ப்பனியத்துக்கும் தொடர்பே இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா? அல்லது தொழிலாளர் சக்தி இப்படிச் சிதறிக் கிடப்பதற்கே பார்ப்பனியம் பெருங்காரணியாக இருக்கிறது என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லையா? ஒரு வேளை இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தால் தொழிலாளர் உணர்வுகளைப் புண் படுத்திவிடக்கூடாது - அப்போதுதான் தலைமையில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்களா?
தொழிலாளர் வர்க்கம் இப்படிச் சிதறுண்டு கிடப்பதற்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனியமே என்பதை ஏற்றுக் கொண்டால், அந்தப் பார்ப்பனியப் போக்கு தொழிலாளர் களிடையே நிலவுவதையும் விளக்கியே ஆக வேண்டும். இந்தத் தொற்றுநோயை அலட்சியம் செய்வதாலோ, அதைப்பற்றி மவுனம் சாதிப்பதாலோ தொழிலாளர்களைப் பீடித்துள்ள பீடை அகலாது. இந்தப் பார்ப்பனியப் போக்கைத் தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடி யோடு கல்வி எறிய வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை சாத்தியப்படும்.
(பம்பாய் மன்மத்தில், 1938 பிப்பிரவரி 12, 13 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட இரயில்வே தொழிலாளர் மாநாட்டில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய சொற் பொழிவு. அம்பேத்கர் நூல் (தமிழ்) தொகுப்பு : தொகுதி 37).
-0-

5.சமத்துவத்தை குழி தோண்டி புதைத்த மனு சாஸ்திரம்

சாட்சிகள்-பொய் சாட்சிகள் பற்றி மனு கூறுவது என்ன?

“இந்துமதம் சமூக சமத்துவத்தை உருவாக்கியதா என்ற கேள்வி, உடனடியாக ஒருவரது சிந்தனையில் சாதி அமைப்பு முறையைக் கொண்டு வருகிறது. பல்வேறு சாதிகளும், ஒரே தரத்தில் கிடைமட்ட வரிசையில், அருகருகே அமர்த்தப்பட வில்லை என்பது சாதி அமைப்பின் ஒரு முனைப்பான அம்சமாகும். பல்வேறு சாதிகளும் ஒன்றன் மீது ஒன்றாக, செங்குத்தான வரிசையில் அமர்த்தப்பட் டுள்ளதொரு அமைப்பு அது. சாதிகளைத் தோற்று வித்ததில் மனுவுக்குப் பொறுப்பு இல்லாதிருக்கலாம். வருணத்தின் புனிதத்துவத்தை மனு போதித்தார்; நான் எடுத்துக் கூறியுள்ளபடி வருணமே, சாதி அமைப்பின் தாய். அந்த வகையில், சாதி அமைப்பின் மூலவராக இல்லையெனினும், அதன் தோற்றத்திற்கான கர்த்தாவாக மனு விளங்கினார் என்று குறை கூறலாம். எது எப்படியாயினும், சாதி அமைப்பைப் பொறுத்து அவற்றைத் தரப்படுத்தி, படிமப்படுத்தும் கோட் பாட்டினை உயர்த்திப் பிடித்ததில் மனு பொறுப்பு வகித்தார் என்பதில் அய்யமில்லை.

மனுவின் திட்டப்படி, பிராமணன் முதல் தரத்தில் வைக்கப்பட்டான். அதற்கு அடுத்து க்ஷத்திரியர்; க்ஷத்திரியருக்குக் கீழ் வைசியர்கள்; அவர்களுக்குக் கீழ் சூத்திரர்கள்; சூத்திரர்களுக்கும் கீழே ஆதி சூத்திரர்கள் (தீண்டாதார்). இந்தத் தர வரிசை அமைப்பானது, சமத்துவமற்ற கோட்பாட்டினை எடுத்துரைப்ப தாகும். எனவே, இந்து மதம் சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்று மெய்யாகவே கூறலாம். அந்தஸ்தில் சமத்துவமற்ற இந்த நிலையானது, ஏதோ மன்னரின் அரசவைக் கூடத்தின் விழாக் கூட்டத் திற்காக  வரிசைப்படுத்திய முன்னுரிமைப் பட்டியல் ஆணை அல்ல. அது, மக்களினத்தவரிடையே கடைப்பிடிக்க வேண்டிய - எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா நோக்கங்களிலும், அமுலாக்கப்பட வேண்டிய, ஒரு நிரந்தர, சமுதாய உறவாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், மனு இந்த வேறுபாட்டினை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்பதை விவரித்துக் கூறின், அது பெரிதும் நீண்டு விடும்; அவர், சமத்துவமின்மையை வாழ்வின் ஜீவசக்தியாக்கினார். ஆனால், அடிமைத்தனம், திருமணம், சட்டவிதிகள் போன்ற சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு அதை விளக்க முற்படுகிறேன்.

அடிமைத்தனத்தை மனு அங்கீகரித்தார். ஆனால், அதனை சூத்திரர்களுக்கு மட்டுமே என்று வரையறுத் துள்ளார். மூன்று உயர்சாதி அமைப்பினராலும் சூத்திரர்கள் மட்டுமே அடிமைப்படுத்தப்பட முடியும். ஆனால், உயர்சாதியினர் சூத்திரர்களுக்கு அடிமைகளாக முடியாது.

ஆனால், மனுவின் சட்டத்திலிருந்து நடைமுறை வேறுபட்டது என்பது கண்கூடு. சூத்திரர்கள் மட்டுமின்றி, இதர மூன்று வகுப்பினைச் சேர்ந்தோரும்கூட, அடிமைகளாயினர்; இது கண்டுபிடிக்கப்பட்டவுடன், மனுவின் வாரிசாக வந்த நாரதர் ஒரு புது விதியை உருவாக்கினார். நாரதரின் இந்தப் புதிய விதி கீழ் வருமாறு:

5.39 - “ஒரு மனிதன், அவனது சாதிக்கு விசேஷ மான கடமைகளை மீறினால் தவிர, நான்கு சாதிகளில் தலைகீழ் வரிசையில் அடிமைத்தனம் விதிக்கப்பட வில்லை. அது போன்று ஏற்பட்டால் அடிமைத்தனம் என்பது ஒரு மனைவியின் நிலைக்கு ஒத்ததாகும்....”

அடிமைத்தனத்தை அங்கீகரிப்பதே மோசமானது தான். ஆனால், அடிமைத்தன விதிகள், அவற்றின் போக்கில் விடப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் ஒரு சாதகமான விளைவு ஏற்பட்டிருக்கும். அது சமனப்படுத்தும் விசையாக இருந்திருக்கக் கூடும். சாதிகளின் அஸ்திவாரம் தகர்க்கப்பட்டிருக்கும். ஏனெனில் அதன் கீழ், ஒரு பிராமணன், தீண்டாதானின் அடிமையாகவும், தீண்டாதான் பிராமணனின் எஜமானராகவும் ஆகியிருக்கக் கூடும். ஆனால், தங்கு தடையற்ற அடிமைத்தனம் ஒரு சமனப்படுத்தும் அம்சம் என்று காணப்பட்டது; ஆகவே அதைச் செல்லாததாக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனவே மனுவும் அவரது வழி வந்தவர்களும், அடிமைத்தனத்தை அங்கீகரித்த போது வருண அமைப்பில், தலைகீழ் வரிசையில் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று விதித்தனர். அதன் பொருள், ஒரு பிராமணன் மற்றொரு பிராமணனுக்கு அடிமையாகலாம்; ஆனால், அவன் க்ஷத்திரிய, வைசிய, சூத்திர அல்லது ஆதிசூத்திரன் ஆகிய இதர வருணத்தைச் சார்ந்தவனுக்கு அடிமையாக மாட்டான். மாறாக, ஒரு பிராமணன், நான்கு வருணங்களில், எந்த வகுப்பினைச் சேர்ந்த வரையும் தனது அடிமையாக்கிக் கொள்ள முடியும். ஒரு க்ஷத்திரியர், வேறொரு க்ஷத்திரியரையோ, வைசியரையோ, சூத்திர மற்றும் ஆதி சூத்திரரையோ தனது அடிமையாகக் கொள்ளலாம்; ஆனால், ஒரு பிராமணனை அவ்வாறு கொள்ள முடியாது. ஒரு வைசியர், ஒரு பிராமணனையும், க்ஷத்திரியனையும் தவிர, வேறொரு வைசியரையோ, சூத்திரரையோ, ஆதி சூத்திரரையோ தனது அடிமையாக்கிக் கொள்ள லாம். ஒரு சூத்திரன் வேறொரு சூத்திரரையும், ஆதி சூத்திரர் மற்றொரு ஆதி சூத்திரரையும் அடிமை களாகக் கொள்ளலாம். ஆனால் ஒரு பிராமணரை யோ, க்ஷத்திரியரையோ, வைசியரையோ, சூத்திர ரையோ ஆதி சூத்திரர் அடிமையாக்க முடியாது.

பல்வேறு வகைப்பட்ட வருணத்தாருக்கிடையே நடைபெறும் கலப்பு மணங்கள் பற்றி மனு விதித்துள்ள விதிகள் பின்வருவன:

3:12 - “இரு பிறப்பாளராம் வருணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வருணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணஞ் செய்யப் பரிந்துரைக்கப் படுகிறது. மீண்டும் திருமணம் செய்து கொள்ள விருப்பமுடையோர் வருணமுறையின் நேர் வரிசையில்  தேர்ந்தெடுத்தல் வேண்டும்.”

3:13 - “சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும். வைசியனுக்கு வைசிய, சூத்திரப் பெண்; க்ஷத்திரியனுக்குச் க்ஷத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்கள், பிராமணர்க்குப் பிராமண, க்ஷத்திரிய, சூத்திரப் பெண்கள்.”

மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர். ஒவ்வொரு வருணத்தாரும் தமக்குள்ளேயே மணம் புரிதல் வேண்டும். குறித்த வருணத்திற்கு வெளியே நடக்கும் திருமணத்தை மனு பொதுவாக அங்கீகரிக்கின்றார். அடிமை முறையைப் போல வரிசைப்படுத்தப்பட்ட, சமமின்மைக் கோட்பாட்டிற்கு ஊறுவிளைவிக்காத வகையில்  கலப்புத் திருமண முறையை அனுமதிக் கிறார். கலப்புத் திருமணத்தை அவர் அங்கீகரிப்பது அடிமை முறையைப் போல, தலைகீழ் வரிசை யிலன்று. பிராமணன் எந்த வருணப் பெண்ணையும் மணக்கலாம். க்ஷத்திரியன் தன் வருணம், தன் கீழ் வருணமான வைசிய, சூத்திர வருணங்களிலும் பெண் கொள்ளலாம். ஆனால், மேல் வருணமாகிய பிராமணப் பெண்களை மணக்கக் கூடாது. வைசியன் தன் வகுப்பிலும் சூத்திர சாதியிலும் பெண் கொள்ளலாம்; க்ஷத்திரிய, பிராமணப் பெண்களை மணத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்தப் பாரபட்சம்? அவரது வழிகாட்டு நெறியாக அமைந்துள்ள சமத்துவமின்மையை அப்படியே கட்டிக்காக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தின் விளைவுதான் இது. சட்டத்தின் விதிகளைக் காண்போம். அது பற்றி மனு என்ன கூறுகிறார் என்பதை அறிய ஆர்வமுள்ளோர் அவர் வகுத்துள்ள பின்வரும் விதிகளைக் காண்க. எளிதில் புரிந்து கொள்வதiற்காகத் தெளிவாகத் தெளிவான தலைப்புகளில் பகுத்துத் தந்துள்ளேன்.

முதலில் சாட்சிகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்; மனு முறைப்படி அவர்களுக்குப் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் செய்வித்தல் வேண்டும்.

8:87 - “முற்பகலில் தூய்மை பெற்ற நீதிபதி, இரு பிறப்பாளர் (தூய்மை பெற்றவர்) பிராமணர் அல்லது தெய்வீகச் சின்னம் முன்னிலையில் உண்மையைக் கூறுமாறு அறிவுறுத்த வேண்டும். சாட்சிகள் வடக்கு அல்லது கிழக்கு முகமாக நிற்றல் வேண்டும்.”

8:88 - “பிராமணரிடத்தில் ‘கூறுக’ என்றும், க்ஷத்திரியனிடத்தில் ‘உண்மையைக் கூறுக’ என்றும், வைசியனிடத்தில் அவனுடைய ‘பசுக்கள், பொன், தானியங்கள் மேல் ஆணையிட்டுக் கூறுக’ என்றும், சூத்திரனாயின் ‘தலைமீது ஆணையிட்டு, பொய் கூறினால் வரும் கேடுகளைக் கூறி அச்சுறுத்திக் கூறுக’ என்றும் பிரமாணம் செய்க.”

8:113 - “ஒரு மத குருவை அவனது வாய்மையின் மீதும், ஒரு போர் வீரனை அவனது குதிரை, யானை மற்றும் அவனது ஆயுதத்தின் மீதும், ஒரு வணிகனை அவனது பசுக்கள், தானியம், தங்கம் ஆகியவற்றின் மீதும், குற்றவேல் புரிபவனை அவனது தலை மேல் சத்தியம் செய்யுமாறும் நீதிபதி கூறவேண்டும்.”

மனு பொய்ச் சாட்சி அளிப்போரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பொய்ச் சாட்சி அளிப்பதையும் ஒரு குற்றமாகக் கருதி மனு விதிப்பதாவது:

8:122 - “பொய்சாட்சி சொல்லுவோருக்கும் இந்தத் தண்டனை விதிகள் ரிஷிகளால் வகுக்கப்பட்டுப் பெரியோர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”

8:123 - “க்ஷத்திரியர் முதலான மூவகைக் கீழ் வருணத்தார் பொய்ச் சாட்சி கூறினால் அரசன் முதலில் அபராதம் விதித்துவிட்டுப் பிறகு அவர்களை நாடு கடத்த வேண்டும்ட் ஆனால் பிராமணராயின் நாடு கடத்தல் மட்டுமே செய்ய வேண்டும்.... இதிலும் மனு ஒரு விதிவிலக்கு அளித்துள்ளார்.”

8:112 - “பெண்களிடம் களியாட்டத்தின் போதும், திருமண ஏற்பாடு தொடர்பாகவும், பசு தீவனத்தையோ பழத்தையோ தின்றுவிட்டது பற்றியும், யாகத்திற்கான சமிதைகள் எடுத்துக் கொண்டது பற்றியும், பிராமணரைக் காப்பாற்று வதற்காக வாக்குறுதி அளித்தது பற்றியும் பொய்ச்சாட்சி சொல்வது பெரும்பாவமன்று.”

வழக்கு நடவடிக்கைகளில் அவரவர்க்குரிய நிலைகளுக்கேற்ப முக்கியமான குற்றங்களுக் குரிய தண்டனை முறைகளாக மனு கூறுவதா வது:  அவதூறுக்குரிய தண்டனை:

8:267 - “புரோகிதனுக்கு அவதூறு இழைக்கும் க்ஷத்திரியனுக்கு நூறு பணமும், அவ்வாறு தவறிழைக்கும் வைசியனுக்கு நூற்றைம்பது அல்லது இருநூறு பணமும், ஒரு அடிமையோ, தொழிலாளியோ தவறிழைத்தால் கசையடியும் விதித்தல் வேண்டும்.”

8:268 - “ஒரு புரோகிதர் க்ஷத்திரியனுக்கு அவதூறு விளைவித்தால் ஐம்பது பணமும், வைசியனுக்கு அவதூறு விளைவித்தால் பன்னிரண்டு பணமும் அபராதம் விதித்தல் வேண்டும்.”

நிந்தனைக் குற்றத்தை எடுத்துக் கொள்வோம். மனு விதிக்கும் தண்டனை வருமாறு:
8:270 - “சூத்திரன், இரு பிறப்பாளரைக் கடுஞ் சொற்களால் நிந்தித்தால், அவன் நாக்கை அறுத்தல் வேண்டும். ஏனெனில் பிரமனின் கீழான பாகத்தில் அவன் பிறந்தவன்.”

8:271 - “அவன் பெயரையும், சாதியையும் நிந்தித்தால் உதாரணமாக, ‘தேவதத்தா, பிராமணக் குப்பையே’ என்றால் பத்து விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பாணியை அவன் வாயில் நுழைத்தல் வேண்டும்.”

8:272  - “கர்வத்தால், பிராமணன் எப்படிப் பணி யாற்ற வேண்டும் என்பது பற்றிக் கட்டளையிட்டால், அவன் வாயிலும் காதிலும் காய்ச்சிய எண்ணெயை ஊற்றுமாறு அரசன் கட்டளையிடுதல் வேண்டும்.”

8:276 - “பரஸ்பர பழித்தலைச் செய்த பிராமண னுக்கும் க்ஷத்திரியனுக்கும் அரசன் தண்டனை விதிக்க வேண்டும்., பிராமணனுக்கு மிகக் குறைவாகவும், க்ஷத்திரியனுக்கு மிதமாகவும் விதித்தல் வேண்டும்.”

8:277 - “வைசியனுக்கும் சூத்திரனுக்கும் அவரவர் வருணத்திற்குரிய முறையில் ஒன்றுபோலத் தண்டனை விதித்தல் வேண்டும். நாக்கை அறுப்பது சூத்திரருக்கு மட்டுமே. இதுவே தண்டனைக்குரிய நிலையான விதிமுறை.”
தாக்கியமைக்கான தண்டனையை மனு விதிக்கிறார்:
8:279 - “இழிகுலத்தில் பிறந்தவன் உயர்குலத் தானை எந்த அங்கத்தினால் தாக்கினானோ அல்லது புண்படுத்தினானோ அந்த அங்கத்தைத் துண்டித்தல் வேண்டும்; அல்லது காயத்தின் அளவுக்குத் துண்டிக்க வேண்டும். இதுவே மனு விதித்த நீதி.”
8:280 - “சினத்தினால் கையோங்கியோ, தடி யெடுத்தோ ஒருவனை அடித்தால், அடித்தவன் கையையும், உதைத்த காலையும் வெட்ட வேண்டியது.”
8:281 - “உயர்சாதிக்காரனுடன் இழி சாதிக்காரன் சரியாசனத்தில் அமர்ந்தால் அந்த ஆணவச் செயலுக்காக இடுப்பில் சூடு போடுதல் வேண்டும்; அல்லது நாடு கடத்தப்படுதல் வேண்டும்; அல்லது அவனது ஆசனத்தில் ஒரு வெட்டுப்புண் ஏற்படுத்திட அரசன் ஆணை பிறப்பித்தல் வேண்டும்.”
8:282 - “ஆணவத்தால் அவன் துப்பினால், அரசன் அவனது இரு உதடுகளையும் வெட்டிடல் வேண்டும். அவன் மீது சிறுநீர் பெய்தால் ஆண்குறியை வெட்டிடல் வேண்டும்., அவன் மீது குசு விட்டால், ஆசனத்தை வெட்டிடல் வேண்டும்.”
8:823 - “பிராமணனின் முடியைப் பிடித்திழுத் தாலோ காலைப் பிடித்து வாரினாலோ, தாடியை, கழுத்தை, விதையைப் பிடித்து இழுத்தாலோ அவன் கையை வெட்டிவிடுமாறு அரசன் தயங்காமல் ஆணையிடுதல் வேண்டும்.”
பிறன்மனை புணர்தலுக்கு மனு விதிக்கும் தண்டனையாவது:
8:359 - “இழிகுலத்தான் ஒருவன் பிறன்மனை புணர்ந்தால் அவனுக்கு மரணதண்டனை விதித்தல் வேண்டும். எல்லா வருணங்களையும் சார்ந்த மனைவி களையும் குறிப்பாகப் பாதுகாத்தல் வேண்டும்.”
8:366 - “உயர்குலத்துப் பெண்ணைக் காதலிக்கும் இழிகுலத்தானுக்குக் கசையடி கொடுத்தல் வேண்டும்; அவரவருடைய சம வர்க்கத்துப் பெண்ணைக் காதலித்தால் பெண்ணின் தந்தை சம்மதத்தைப் பெற்றுப் பரிசம் போட்டு அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.”
8:374 - “இரு பிறப்பாளனின் மனைவியுடன் சோரம் போகும் சூத்திரன், அப்பெண் இல்லத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், காக்கப்படாவிடினும் பின்வரும் தண்டனைக்குள்ளாவான். காக்கப் படாத பெண்ணாயின் தன் சொத்துக்களை இழப்பதுடன் ஆண் குறியையும் வெட்டப்பட வேண்டியவனா கின்றான். காக்கப்பட்டவளாயின் அவன் உயிரையும் பிற அனைத்தையும் இழத்தல் வேண்டும்.”
8:375 - “காப்பிலுள்ள பிராமணப் பெண்ணுடன் சோரம் போகும் வைசியன் செல்வமனைத்தையும் இழந்தும், அத்தகைய குற்றம் புரியும் க்ஷத்திரியனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் கழுதை மூத்திரத்தால் தலைச் சவரமும் பண்ணி விடுதல் வேண்டும்.”
8:376 - “க்ஷத்திரியனோ, வைசியனோ காப்பில்லா பிராமணப் பெண்ணுடன் சோரம் போனால் வைசியனுக்கு ஐந்நூறு பணமும் க்ஷத்திரியனுக்கு ஆயிரம் பணமும் அபராதம் விதித்தல் வேண்டும்.”
8:377 - “இவ்விரு சாதியைச் சேர்ந்தவரும், மேன்மை மிக்கவளும் பிராமணனின் காப்பிலுள்ள வளுமான மனைவியைச் சேர்ந்தால், அவர்களுக்குச் சூத்திரருக்குரிய தண்டனையே வழங்குதல் வேண்டும்; அல்லது உலர்ந்த புல்லும் நாணலும் நிறைந்த படுக்கையிலிட்டு எரிக்கப் பெறுதல் வேண்டும்.”
8:382 - “க்ஷத்திரியனின் காப்பிலுள்ள மனைவியை வைசியன் கூடினாலும், வைசியப் பெண்ணை க்ஷத்திரியன் கூடினாலும் காப்பில் இல்லாத பிராமணப் பெண்ணுடன் சோரம் போவானுக்குரிய தண்டனை பெறுவர்.”
8:383 - “பிராமணர் இவ்விரு சாதியைச் சார்ந்த காப்பிலுள்ள மனைவியுடன் சோரம் போனால் ஆயிரம் பணமும் சூத்திரப் பெண்ணுடன் சோரம் போனால் ஆயிரம் பணமும் அபராதம் வதிக்கப் பெறுதல்  வேண்டும். க்ஷத்திரிய, வைசியருக்கும் அப்படியே.”
8:384 - “க்ஷத்திரிய வகுப்பைச் சார்ந்த காப்பிலுள்ள பிறர் மனைவியுடன் வைசியன் சோரம் போனால், ஐந்நூறு பணம் அபராதம், க்ஷத்திரியன் வைசியப் பெண்ணுடன் சோரம் போனால் ஐந்நூறு பணம் அபராதம் அல்லது மூத்திரச் சவரம் விதித்தல் வேண்டும்.”
8:385 - “காப்பில் இல்லாத க்ஷத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்ணுடன் சோரம் போகும் பிராமண னுக்கு அய்ந்து நூறு பணமும், சண்டாளியுடன் சோரம் போனால் ஆயிரம் பணமும் அபராதம் விதிக்க வேண்டும்.
பல்வகைக் குற்றங்களுக்கு மனு விதிக்கும் தண்டனை முறைகள் வேடிக்கையானவை. அவற்றுள் சில:
8:379 - “பிராமணன் எத்தகைய பாவமோ கலப்போ செய்த போதிலும் அவனைக் கொல்லக் கூடாது; ஏனையோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.”
8:380 - “எத்தகைய பாவத்தைச் செய்தபோதிலும், பிராமணனைக் கொல்லாமலும், அவன் பொருளைக் கவர்ந்து கொள்ளாமலும் ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்.”
11:127 - “நற்குணமுள்ள க்ஷத்திரியனைக் கொன்றால் பிராமணனைக் கொன்ற பாவத்திற்கு விதித்த பன்னிரண்டு வருட விரதத்தில் நாலில் ஒரு பங்கும், வைசியனைக் கொன்றால் எட்டில் ஒரு பங்கும், தன்னுடைய கடமைகளைக் கைவிடாது செய்யும் சூத்திரனைக் கொன்றால் பதினாறில் ஒரு பங்கும் கழுவாயாகும்.”
11:128 - “ஆயின் அறியாமல் க்ஷத்திரியனைப் பிராமணன் கொன்றால் அனைத்துச் சடங்குகளும் செய்து புரோகிதனுக்கு ஓர் எருமையும் ஆயிரம் பசுக்களையும் தானம் செய்ய வேண்டும்.”
11:129 - “அல்லது ஒரு பிராமணனைக் கொன்று அவனது அங்கங்களை அழித்த குற்றத்திற்குரிய தண்டனையை அவன் நகரிலிருந்து வெகுதூரம் சென்று ஒரு மரத்தடியை உறைவிடமாகக் கொண்டு மூன்றாண்டு காலம் அங்கு தங்கி கழுவாய் தேட வேண்டும்.”
11:130 - “ஒழுக்கமிக்க ஒரு வைசியனைப் பிராமணன் அறியாமற் கொன்றால் ஓராண்டு விரதமோ அல்லது புரோகிதருக்கு ஒரு எருதும் நூறு பசுக்களும் தானமோ செய்ய வேண்டும்.”
11:131 - “சூத்திரனைக் கொன்றால் ஆறு மாதம் விரதமோ புரோகிதருக்கு ஒரு எருதுடன் பத்துப் பசுக்களைத் தானமோ செய்ய வேண்டும்.”
8:381 - “பிராமணனைக் கொல்வதைவிட உலகத் தில்  பெரிய தொரு பாவம் வேறு இல்லையாதலால், பிராமணனைக் கொல்லுவது பற்றி அரசன் மனதளவில்கூட நினைக்கக் கூடாது.”
8:126 - “குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனை களை, குற்றம் முதல் தடவையா, இரண்டாம் தடவையா என்பதையும், குற்றத்தின் தன்மையையும், தண்டனையைத் தாங்கக் கூடியவனா என்பதையும், காலத்தையும், தண்ட நீதிகளையும் நன்கு ஆராய்ந்து ஏற்ற தண்டனைகளை மன்னன் விதிக்க வேண்டும்.”
8:124 - “பிராமணனைத் தவிர்த்த ஏனைய வருணத்தார் குற்றம் இழைப்பின் தண்டிக்கத்தக்க இடங்கள் பத்து என்றும், பிராமணனாயின் அவனைக் காயப்படுத்தாமல் துரத்திவிட வேண்டு மென்றும் சுயம்புவாகத் தோன்றிய மனு கூறியுள்ளார்.”
8:125 - “இனவிருத்தி உறுப்பு, வயிறு, நாக்கு, கை, கால், கண், மூக்கு, காது, பொருள், உடைமை ஆக தண்டிக்கப்பட வேண்டிய இடங்கள் பத்தாகும், மரண தண்டனையாயின் முழு உடம்பும் இலக்காக அமையும்.”
சமயச் சடங்குகள், யாகங்கள் சம்பந்தமான உரிமைகள், கடமைகள் பற்றி மனு தெரிவிக்கும் கருத்து:
இந்துச் சட்ட முறைகளுக்கும் இந்து அல்லாத சட்டமுறைகளுக்குள்ளேயும் எத்துணை வேறுபாடு! குற்றவியல் சட்டத்தில் சமமின்மை எவ்வாறு ஆழமாகப் பதிக்கப் பெற்றுள்ளது! நீதி முறைப்படி அமைந்த குற்றவியல் சட்டத்தில், இரு கூறுகளை நாம் காணலாம். குற்றத்தின் இலக்கணத்தை வகுப்பது ஒரு பிரிவு அதை மீறுவோருக்கு அறிவுக்குப் பொருத்தமான தண்டனை விதிப்பது மற்றொரு பிரிவு. எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரே விதமான தண்டனையே. மனுவில் நாம் காண்பது யாது? அறிவுக்குப் பொருத்தமற்ற தண்டனை முறை. குற்றத்துடன் சம்பந்தப்பட்ட அவயத்தைத் துண்டித்தல்; வயிறு, நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள், பிறப்பு உறுப்புகள் போன்றவற்றிற்குத் தனித் தன்மை உண்டு என்பது போலவும், உடலோடு உடன் வாழ்வன போலவும் கருதித் தண்டனை அளித்தல். மனுவின் குற்றவியல் சட்டத்தின் இரண்டாம் கூறுபாடு குற்றத்தின் கடுமையை மீறிய மனித தன்மையற்ற தண்டனை விதித்தல். மனுவின் குற்றவியல் சட்டத்தின் மிக வெளிப்படையான கூறுபாடு, ஒரே விதமான குற்றத்திற்குப் பல சமமற்ற தண்டனைகளை விதித்தல் அப்பட்டமாகத் தெரிகிறது. குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமின்றி, நீதி கேட்டு மன்றத்திற்கு வருபவருக்குள் சிலருடைய கண்ணியம் காக்கவும், சிலரைத் தாழ்த்தி வைக்கவும் திட்டமிட்ட இச்சமமின்மைச் செயல் மனுவின் திட்டத்தின் அடிப்படையானதும் சமூகச் சமமின்மையை நிலைநாட்டுவதுமேயாகும். சமூச் சமமின்மையை மனு எவ்வாறு நிலைநாட்டியுள்ளார் என்பதைக் காட்டுவதற்குரிய சான்றுகளை இதுவரை எடுத்துக் காட்டியுள்ளேன்.
(‘இந்துமதத் தத்துவமும் மனு தர்மமும்’ - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்)
-0-

6.மதத்தைப் பற்றி...

மதத்தை அழிப்பது என்று நான் கூறுவதன் பொருள் என்ன என்பதைச் சிலர் புரிந்துகொள்ளா மலிருக்கலாம்; சிலருக்கு இந்தக் கருத்து வெறுப் பாயிருக்கலாம்; சிலருக்கு அது புரட்சிகரமாகத் தோன்றலாம். எனவே நான் என்னுடைய நிலையை விளக்கி விடுகிறேன். தத்துவங்களுக்கும் விதிகளுக்கும் இடையே நீங்கள் வேறுபாடு கருதுகிறீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் வேறுபாடு கருதுகிறேன். இந்த வேறுபாடு உண்மையானது, மிக முக்கியமானது என்றும் நான் கூறுகிறேன். விதிகள் யதார்த்தமான நடைமுறைபற்றியவை; காரியங்களைக் குறிப்பிட்ட முறைப்படி செய்வதற்கு வழக்கமான வழிகள் அவை. ஆனால் தத்துவங்கள் அறிவு சம்பந்தப்பட்டவை. விஷயங்களை மதிப்பிட்டு நிர்ணயம் செய்வதற்கு உபயோகமான வழிகள் அவை. விதிகள், ஒரு காரியத்தை ஒருவர் செய்யும் போது என்ன வழியில் செயல்பட வேண்டும்
என்று கூறுகின்றன. விதிகள், சமையல் குறிப்புகள் போல, என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றன. தத்துவம் என்பது -உதாரணமாக நீதித் தத்துவம் - ஒருவன் தன்னுடைய ஆசைகளும் நோக்கங்களும் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் கவனிக்க வேண்டிய அளவை ஆகும். அது, ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது என்னென்ன அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டி சிந்தனைக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு தத்துவங் களுக்கும் விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு காரணமாக அவற்றின் அடிப்படையில் செய்யப் படும் செயல்களின் தரமும் தன்மையும் வேறுபடு கின்றன. நல்லது என்று சொல்லப்படுவதை ஒரு விதியின் காரணமாகச் செய்வதற்கும், தத்துவத்தின் அடிப்படையில் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தத்துவம் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படையில் செய்யப்படும் செயல் உணர்வுடனும் பொறுப்புடனும் செய்யப்படுகிறது. விதி சரியானதாக இருக்கலாம். ஆனால் அதைப் பின் பற்றும் செயல் யந்திரத்தனமானது.
ஒரு மதச் செயல் சரியானதாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம், பொறுப்புடனும் செய்யப்படுவதாகவேனும் இருக்க வேண்டும். இவ்வாறு பொறுப்புடன் செய்யப்பட வேண்டுமானால் மதம், முக்கியமான தத்துவங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.; அது விதிகள் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடாது. மதம் என்பது வெறும் விதிகள் மட்டும் சம்பந்தப் பட்டதாகும்போது அது மதம் என்ற நிலையை இழந்து விடுகிறது. ஏனென்றால் அது மதச் செயலில் பொறுப்பைக் கொன்று விடுகிறது. பொறுப்புடன் செய்யப்படுவதுதான் மதச் செயலின் சாரமான பண்பு. இந்து மதம் என்பது என்ன? அது தத்துவங் களின் தொகுப்பா அல்லது விதிகளின் தொகுப்பா? இந்து மதம், வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ளபடி பார்த்தால், யாகம், சமூகம், அரசியல், சுகாதாரம் சம்பந்தப்பட்ட விதிகள், ஒழுங்கு முறைகள் ஆகிய எல்லாம் கலந்த ஒரு தொகுப்பாகவே இருக்கிறது. மதம் என்று ஒரு இந்து குறிப்பிடுவது பல்வேறு ஏவல்களும் தடை களும் கொண்ட ஒரு தொகுப்பே. இவற்றில், எல்லா மக்களுக்கும், எல்லா இனங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய ஆன்மிகத் தத்துவங்கள் என்ற பொருளில் கூறப்படும் மதம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஒரு இந்துவின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் அம்சமாக அது காணப்படவில்லை.
ஒரு இந்துவுக்குத் தர்மம் என்பது பல ஏவல்கட்டளைகளும் தடைக் கட்டளைகளுமே ஆகும். வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தையும், உரைகாரர்கள் அதைப் புரிந்துகொண்டிருக்கும் விதத்தையும் பார்த்தால் இது தெளிவாகத் தெரிகிறது. வேதங்களில் தர்மம் என்ற சொல் பெரும்பாலும் மதக் கட்டளைகளையும் சடங்குகளையும் குறிப்ப தாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜைமினி தம் முடைய பூர்வ மீமாம்ஸையில் தர்மம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்: “(வேதத்தில்) கட்டளையாகக் கூறப்படுகின்ற விரும்பத்தக்க குறிக்கோள் அல்லது பலன்.” எளிமையாகச் சொன்னால், இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியாக வகுப்பு ஒழுக்கமுறையே. இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன். இவ்வாறு மதம் என்று மக்களிடம் தவறாகக் காட்டப்படும் கட்டளைத் தொகுப்புகளின் முதல் தீமை, அறநெறி வாழ்க்கை இயற்கையாக, சுயேச்சை யானதாக இருப்பதற்கு மாறாக, வெளியிலிருந்து சுமத்தப்படும் விதிகளைக் கவலையுடனும் அடிமைத் தனமாகவும் அனுசரித்து நடக்கும் செயலாக மாறி விடுகிறது என்பதாகும்.
லட்சியங்களுக்கு விசுவாச மாக நடப்பதற்குப் பதிலாக, கட்டளைகளுக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது. எல்லாவற்றிலும் பெரிய தீமை, அந்தச் சட்டங்கள் நேற்றும், இன்றும், இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான் என்று தீர்மானிக்கப்பட்டிருப் பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது. தீர்க்க தரிசிகள் அல்லது சட்டம் அளிப்போர் என்று கூறப்படும் சில நபர்களால் இந்த விதித் தொகுப்புகள் உருவாக்கப் பட்டன என்பது ஆட்சேபிக்கப்படவில்லை. ஆனால் இவை இறுதியானவை, மாற்றமுடியாதவை என்று கூறப்படுவது ஆட்சேபத்துக்குரியது. இன்பம் என்பது ஒரு மனிதனின் நிலைமைகளுக்குத் தகுந்தபடி மாறக் கூடியது. அது மட்டுமின்றி வெவ்வேறு மக்களின் வெவ்வேறு காலங்களின் நிலைமைக்குத் தகுந்த படியும் அது மாறக்கூடியது. அப்படியானால், என்றென்றைக்கும் மாறாத இந்தச் சட்டங்களைச் சகித்துக்கொள்ளச் செய்வது மக்களை நெருக்கிப் பிடித்துக் கட்டிப் போடுவது போலாகுமல்லவா? எனவே இப்படிப்பட்ட மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. இப்படிப்பட்ட மதத்தை அழிக்கப் பாடுபடுவது மதத்துக்கு விரோதமான செயல் அல்ல.
இம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து மக்களிடம் அதை மதம் என்று பொய்ப்பெயர் சூட்டியிருக்கும் முக மூடியைக் கிழித்தெறிவது உங்கள் கடமை என்று நான் கருதுகிறேன். இது நீங்கள் அவசியமாகச் செய்ய வேண்டிய காரியம். மக்கள் மனத்தில் உள்ள தவறான எண்ணத்தைப் போக்கி, அவர்கள் மதம் என்று நினைப்பது உண்மையில் சட்டமேயன்றி மதம் அல்ல என்று உணரச் செய்தால், பின்பு அதைத் திருத்த வேண்டும் என்றோ ஒழிக்கவேண்டும் என்றோ அவர்கள் ஏற்கும்படியாகக் கூற முடியும். மக்கள் இதை மதம் என்று நினைக்கும்வரை அதை மாற்ற இணங்க மாட்டார்கள். ஏனென்றால், மதம் என்பது பொதுவாக மாற்றத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சட்டம் என்பது மாற்றப்படக்கூடியது. ஆகவே மதம் என்று தாங்கள் நினைப்பது உண்மையில் பழசாகிப் போன சட்டம் தான் என்று மக்கள் தெரிந்து கொண்டால், அதில் மாற்றம் செய்வதற்கு அவர்கள் தயாராயிருப் பார்கள். ஏனென்றால் சட்டத்தை மாற்றலாம் என்பது அவர்கள் அறிந்து, ஒப்புக்கொண்டுள்ள விஷயமே.
விதிகளின் தொகுப்பாக அமைந்த மதத்தை நான் கண்டனம் செய்வதனால் மதமே தேவை யில்லை என்று நான் கூறுவதாகக் கருதக் கூடாது. மாறாக, மதத்தைப் பற்றி பர்க் (க்ஷரசமந) கூறியுள்ள கருத்து எனக்குச் சம்மதமானதே. அவர் கூறினார்: ‘உண்மையான மதம் சமூகத்துக்கு அஸ்திவாரமா யிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு தான் எல்லா அரசாங்கங்களும் அவற்றின் அதி காரங்களும் அமைந்துள்ளன.’ எனவே இந்தப் பழங்கால விதிகளாலான மதத்தை ஒழிக்க வேண்டும். நான் கூறும் போது, அதற்குப் பதிலாகத் தத்துவங் களாலான மதம் என்று வர வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட மதம்தான் உண் மையில் மதம் என்று கூறத் தகுந்தது.
மதம் மிகவும் அவசியம் என்று நான் உறுதியாக நம்புவதால், மதச் சீர்திருத்தத்தில் அவசியமாக இடம் பெற வேண்டிய அம்சங்கள் என்ன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை வருமாறு: (1) இந்து மதத்துக்கு ஒரே ஒரு பிரமாணமான புத்தகம் இருக்க வேண்டும். இது எல்லா இந்துக்களும் ஏற்கத்தக்கதாக, எல்லா இந்துக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைத் தவிர, வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் முதலாக, புனிதமானவையாகவும் அதிகாரபூர்வமானவை யாகவும் கருதப்படும் எல்லா இந்து மத நூல்களும் அவ்வாறு கருதப்படக்கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இவற்றில் கூறப்பட்டுள்ள மதக் கொள்கைகளையோ சமூகக் கொள்கைகளையோ பிரசாரம் செய்வதை தண்டனைக்குரியதாக்க வேண்டும். (2) இந்துக்களிடையே புரோகிதர்கள் இல்லாமல் ஒழித்து விடுவது நல்லது, ஆனால் இது இயலாது என்று தோன்றுவதால், புரோகிதத் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த வேண்டும். இந்து என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் புரோகிதராக வர அனுமதிக்க வேண்டும். இதற்கென அரசு நிர்ணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று, புரோகிதராக இருப்பதற்கு அரசின் அனுமதிப் பத்திரம் பெறாத எந்த இந்துவும் புரோகிதராக இருக்கக்கூடாது. (3) அனுமதிப் பத்திரம் இல்லாத, பெறாத புரோகிதர் நடத்தும் சடங்குகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அனுமதிப் பத்திரம் பெறாதவர் புரோகிதராகச் செயல்படுவதைத் தண்டனைக்குரியதாக்க வேண்டும். (4) புரோகிதர் அரசின் பணியாளராக இருக்க வேண்டும். ஒழுக்கம், நம்பிக்கைகள், வழிபாடு ஆகிய விஷயங்களில் அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் மற்ற எல்லாக் குடி மக்களையும் போல அவரும் நாட்டின் பொது வான சட்டத்துக்கு உட்பட்டவராயிருக்க வேண்டும். (5) புரோகிதர்களின் எண்ணிக்கையை தேவையின் அடிப்படையில், ஐ.ஸி.எஸ். அதிகாரிகளின் விஷயத்தில் செய்யப்படுவது போல, அரசு வரையறை செய்து நிர்ணயிக்க வேண்டும்.
இவையெல்லாம் சிலருக்கு மிகத் தீவிரமான யோனைகளாகத் தோன்றலாம். ஆனால் என்னுடைய கருத்துப்படி இதில் புரட்சிகரமானது ஒன்றும் இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு தொழிலும் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எஞ்ஜினியர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள் ஆகிய அனைவருமே தங்கள் தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன் அதில் தாங்கள் தேர்ச்சி பெற்றிருப்பதைக் காட்ட வேண்டும். அவர்கள் தொழில் நடத்தும் காலம் முழுவதிலும் அவர்கள் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதுடன், தங்களுடைய தொழில் களுக்குரிய விசேஷ நடத்தைக் கோட்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். புரோகிதர் தொழில் ஒன்றுதான் தேர்ச்சி தேவைப்படாத தொழிலாக உள்ளது. இந்து புரோகிதர் தொழிலுக்கு மட்டும் தான் குறிப்பிட்ட நடத்தைக் கோட்பாடுகள் இல்லை. ஒரு புரோகிதர் அறிவில் சூனியமாக, உடம்பில் ஸிஃபிலிஸ், கொனோரியா போன்ற நோய்கள் பீடித்தவராக, ஒழுக்கத்தில் அதமனாக இருக்கலாம். என்றாலும், புனிதமான சடங்குகளை நடத்தி வைக்கவும் இந்து கோவிலின் மூலஸ்தானத்தில் நுழையவும், இந்துக் கடவுளுக்குப் பூஜை நடத்தவும் அனுமதிக்கப்படுகிறார். இவையெல்லாம் இந்துக் களிடையே சாத்தியமாயிருப்பதற்குக் காரணம் புரோகிதராயிருப்பதற்குப் புரோகித சாதியில் பிறந் திருந்தால் போதும் என்று இருப்பதுதான். இது முற்றிலும் வெறுக்கத்தக்க நிலை.
இந்துக்களின் புரோகிதர் வகுப்பு, சட்டத்துக்கோ ஒழுக்க நெறிக்கோ கட்டுப்பட்டதல்ல என்பதுதான் இதற்குக் காரணம். தனக்கு எந்தக் கடமைகளும் இருப்பதாகவும் அது ஒப்புக் கொள்வதில்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் உரிமைகளும் தனிச் சலுகைகளும்தான். சாதாரண மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு நாசக் கும்பலைப் போல் இவர்கள் தோன்றுகிறார்கள். புரோகித வகுப்பு, நான் மேலே குறிப்பிட்டது போன்ற சட்டங்கள் மூலம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அந்த வகுப்பு விஷமங்கள் செய்யாமலும் மக்களுக்குத் தவறான வழி காட்டா மலும் தடுப்பதற்கு இது உதவும். எல்லோரும் புரோகிதராக வர வழி செய்வதன் மூலம் அதில் ஒரு ஜனநாயகத் தன்மை ஏற்படும். பிராமணியத்தை ஒழிப்பதற்கும், பிராமணியத்தின் மறு அவதாரமான சாதிமுறையை ஒழிப்பதற்கும் இது துணை செய்யும். இந்து மதத்தைக் கெடுத்த நஞ்சு பிராமணியம். பிராமணியத்தை ஒழித்தால்தான் இந்து மதத்தை நீங்கள் காப்பாற்ற முடியும். இந்தச் சீர்திருத்தத்தை எந்தத் தரப்பினரும் எதிர்க்கக் கூடாது. ஆரிய சமாஜிகள் கூட இதை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது அவர்களே கூறும் குண-கர்மக் கொள்கையைச் செயல்படுத்துவதேயாகும்.
இதை நீங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும், உங்கள் மதத்துக்கு நீங்கள் ஒரு புதிய கோட்பாட்டு அடிப்படை கொடுக்க வேண்டும். இந்த அடிப்படை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள் கைக்கு, சுருக்கமாகச் சொன்னால், ஜனநாயகத்துக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நான் புலமை பெற்றவன் அல்லன். ஆயினும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைக்கு இணக்கமான மதத் தத்துவங்களை வெளிநாடுகளி லிருந்து இரவல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் உபநிஷதங்களிலிருந்தே இத்தகைய தத்துவங் களை எடுத்துக்கொள்ள முடியும் என்றும் என்னிடம் கூறப்படுகிறது. நீங்கள் அவ்வாறு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது அதை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டியிருக்குமா, அல்லது அவற்றில் உள்ள மூலக் கருத்துக்களைப் பெருமளவுக்குச் சுரண்டியும் செதுக்கியும் செப்பம் செய்ய வேண்டியிருக்குமா என்று நான் கூற முடியாது.
புதிய கோட்பாடு அடிப் படை அமைப்பது என்றால் வாழ்க்கையைப் பற்றிய அடிப்படைக் கருத்துக்களையே முற்றிலுமாக மாற்றுவதாகும். வாழ்க்கையில் போற்றும் பண்புகள் முற்றிலும் வேறாக அமையும். மனிதர்களைப் பற்றியும் விஷயங்களைப் பற்றியும் கொண்டுள்ள மனப்பான்மைகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப் படும். அது மத மாற்றமாகும்; இந்த வார்த்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது புதிய வாழ்க்கையாகும் என்று கூறுவேன். ஆனால் இறந்துபோன ஒரு உடலுக்குள் புதிய உயிர் புக முடியாது. புதிய உயிர், புதிய உடலில்தான் புக முடியும். புதிய உடல் வந்த அதனுள் புதிய உயிர் நுழைய வேண்டுமானால் பழைய உடல் மரிக்க வேண்டும். எளிமையாகச் சொன்னால், புதியது உயிர்பெற்று துடிப்புப் பெறத் தொடங்குவதற்கு முன் பழையது மறைந்து போக வேண்டும். சாஸ் திரங்களின் அதிகாரத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும் என்றும், சாஸ்திரங்கள் கூறும் மதத்தை அழிக்க வேண்டும் என்றும் நான் கூறியதன் பொருள் இதுதான்.
(உங்கள் நூலகம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது)
-0-

7.காந்தி ஒரு மகாத்மாவா?

காந்தி ஒரு மகாத்மாவா? இந்தக் கேள்வி குறித்து நான் மிகவும் மனவருத்தமடைகிறேன். இந்தக் கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இரண்டு கார ணங்கள் உள்ளன. முதலாவதாக, நான் எல்லா மகாத் மாக்களையும் வெறுக்கிறேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்று கருதுகிறேன்.
நான் ஏன் இவ்வாறு கூறுகிறேனென்றால் அவர்கள், அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் பதிலாக, குருட்டுத்தன மான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு முயல் கின்றனர்.
இரண்டாவதாக, மகாத்மா என்கிற சொல்லினால் மக்கள் திட்டவட்டமாக என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
தனது உடையை மாற்றுவதன் மூலமாகவே மட்டும் இந்தியாவில் யாரும் மிக எளிதில் ஒரு மகாத்மா ஆகிவிடலாம். நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தால், நீங்கள் மிகவும் அசாதார ணமான உன்னதமான செயல்களைச் செய்த போதி லும், யாரும் உங்களைக் கவனிக்கமாட்டார்கள். ஆனால் வழக்கமான முறையில் நடக்காத ஒருவர், சில விநோத மான போக்குகளைக் காட்டினால் - தனது பண்பாட்டில் இயற்கைக்கு மாறான குணங்களைக் கொண்டிருந் தால், அவர் ஒரு மகான் அல்லது ஒரு மகாத்மா ஆகி விடுகிறார்.
நீங்கள் வழக்கமான ஒரு சாதாரண உடையணிந்து கொண்டு ஏதாவது செய்திருந்தால், மக்கள் உங்களைப் பார்க்கவும் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் அதே ஆள், தனது ஆடைகளைக் களைந்தெறிந்துவிட்டு, நிர் வாணமாக ஓடினால், நீண்ட முடிவளர்த்துக் கொண்டு, மக்களைக் கேவலமாகப் பேசி, சாக்கடையிலிருந்து அசுத்தமான தண்ணீரைக் குடித்துக் காட்சியளித்தால், மக்கள் அவருடைய காலில் விழுந்து, அவரை வழி படுவதற்குத் தொடங்குவார்கள்.
இந்தச் சூழ்நிலையில், இந்தியாவில் காந்தி, மகாத் மாவானால் இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. வேறு எந்த நாகரிகமான நாட்டிலாவது இவைகள் கடைப்பிடிக்கப்பட்டால் மக்கள் அவரை ஏளனம் செய்து சிரிப்பார்கள். ஒரு சாதாரணப் பார்வையாளருக்குக் காந்தியின் போதனைகள் மிகவும் இனிமையாகவும், மனதைக் கவர்வதாகவும் தோன்றுகின்றன. உண் மையும் அகிம்சையும் உன்னதமான கோட்பாடுகள். சத்தியத்தையும் (உண்மை) அகிம்சையையும் காந்தி போதித்ததாக உரிமை கொண்டாடப்படுகிறது. மக்கள் இதை மிகவும் விரும்பினார்கள். எனவே ஆயிரக்கணக் கில் அவர்கள் காந்தி சென்றவிடமெல்லாம் அவரைச் சூழ்ந்தார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், மகான் புத்தர் உண்மை, அகிம்சை என்ற போதனையை உலகுக்கு அளித்தார். இந்த விசயத்தில் காந்தி தான் இதனுடைய மூலகர்த்தா என்று ஓர் அறிவற்ற முட்டா ளையும் இயல்பாகவே அறிவிலியாகவும் உள்ளவரைத் தவிர, வேறு யாரும் அவருக்கு மதிப்புக் கொடுக்கமாட் டார்கள். ‘மெய்மை’, ‘அகிம்சை’ மீதான பரிசோதனை யிலிருந்து எழும் சிக்கலான பிரச்சினைகளின் மீது காந்தி கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந் தாரேயானால், அவருடைய மகாத்மா தன்மைக்கு அது ஒளியைக் கூட்டியிருக்கும். உலகம் என்றென்றும் அவருக்கு இதற்காக நன்றி செலுத்தியிருக்கும். இரண்டு புதிர்களுக்கு - அதாவது ‘உண்மை’ என்ற உன்னத மான கோட்பாட்டை எவ்வாறு கடைப்பிடிப்பது, எந்த சூழ்நிலைகளில் ‘வன்முறை’ ஒரு சரியான செயலாகக் கருதப்படுவது என்பவற்றுக்கான தீர்வை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ‘உண்மை’ மற்றும் ‘அகிம்சை’யின் பாலான கண் ணோட்டம் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று மகான் புத்தர் போதித்தார்.
காந்தி இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறாரா? நான் எங்கும் இதைக் காணவில்லை. அவருடைய போதனைகளையும் உபதேசங்களையும் நாம் ஆய்வு செய்தால், அவர் மற்றவர்களின் மூலதனத்தின் மீது விளையாடி வருகிறார் என்பதைக் காண்கிறோம். ‘உண்மையும்’, ‘அகிம்சையும்’ அவருடைய மூலக் கண்டு பிடிப்புகள் அல்ல. காந்தியின் குணாம்சத்தை நான் ஆழந்து ஆராயும் போது, அவருடைய குணாம்சத்தில் ஆழ்ந்த தன்மையையோ அல்லது நேர்மையையோ காட்டிலும் தந்திரம்தான் கூடுதல் தெளிவாகத் தெரிகிறது என்பதை நான் மிகவும் தெளிவாக உணருகிறேன்.
தந்திரத்தினாலும் அவரிடம் உள்ளார்ந்துள்ள புத்திக்கூர்மையினாலும் எப்போதும் அவர் தன்னை முன்னணியில் இருக்கும்படிச் செய்து கொண்டுவிடு வார். தனது ஆற்றலிலும், குணாம்சத்திலும் நம்பிக்கை உடைய ஒருவர், வாழ்க்கையின் எதார்த்தங்களைத் துணிவுடனும் ஆண்மையுடனும் எதிர்கொள்வார். அவர் தனது இடுப்பில் ஒரு குத்தீட்டியைச் செருகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நயவஞ்ச கமும் துரோகமும் பலவீனமானவர்களின் ஆயுதங் களாகும். காந்தி எப்போதும் இந்த ஆயுதங்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.
தன்னைக் கோகலேயின் ஓர் அடக்கமான சீடர் என்று பல ஆண்டுகளாக அவர் அறிவித்து வந்துள் ளார். அதற்குப்பின்னர் பல ஆண்டுகள் அவர் திலகரைப் பாராட்டி வந்துள்ளார். பின்னர் அவர் திலகரை வெறுத் தார். எல்லோரும் இதை அறிவார்கள். நிதி திரட்டுவதற்கு அவர் திலகரின் பெயரைப் பயன்படுத்தியிராவிட்டால் சுயராச்சிய நிதிக்கு ரூ.1 கோடியை அவரால் திரட்டி யிருக்க முடியாது என்பதை எல்லோரும் அறிவார்கள். தனிப்பட்ட முறையிலான தனது உறவை மறந்தும், பிற விசயங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்தும், ஒரு புத்திக்கூர்மையுள்ள அரசியல்வாதி என்ற முறையில், அவர் அந்த நிதிக்குத் திலகரின் பெயரைச் சேர்த்துக் கொண்டார்.
காந்தி கிறித்துவ மதத்தின் உறுதியான எதிராளி யாவார். மேலைய உலகத்தை மகிழ்விப்பதற்காக, நெருக்கடியான சமயங்களில் அவர் அடிக்கடி விவிலி யத்திலிருந்து மேற்கோள் காட்டுவார். அவருடைய மனதைப் புரிந்து கொள்வதற்காக, மேலும் இரண்டு எடுத்துக்காட்டுகளை நான் மேற்கோள் காட்ட விரும்பு கின்றேன்.
வட்டமேசை மாநாட்டின் போது, அவர் மக்களிடம், ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் முன்வைக் கும் கோரிக்கைகளுக்கு எதிராக நான் ஆட்சேபனை எழுப்பமாட்டேன்’ என்று கூறினார். ஆனால் தாழ்த் தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளைச் சமர்ப்பித்தவுடனேயே காந்தி, தான் அளித்த உறுதிமொழிகளையெல்லாம் ஓசைபடாமல் விட்டுவிட்டார். இதைத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அவர் செய்த துரோகம் என்று நான் கருது கிறேன்.
காந்தி முசுலீம்களிடம் சென்று, தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கை களை அவர்கள் எதிர்த்தால், முசுலீம்களின் 14 கோரிக் கைகளைத் தான் ஆதரிப்பதாகக் கூறினார். ஒரு கயவன்கூட இதைச் செய்திருக்கமாட்டான். இது காந்தியின் துரோகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே யாகும்.
இது பெருமளவு என்னை வேதனைப்படுத்தியது. ஒரு பழைய மூதுரையை இச்சமயத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும். ‘கடவுளின் பெயரை உச் சரித்துக் கொண்டே கத்தியைக் கையில் மறைவாக வைத்துக் கொள்வது’ என்பதே அதுவாகும். இத்தகைய ஒருவரை மகாத்மதா என்று அழைக்க முடியுமானால், காந்தியை ஒரு மகாத்மா என்று தாராளமாக அழை யுங்கள். என்னைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதானே தவிர, வேறொன்றுமில்லை.
‘சித்ரா’ இதழின் ஆசிரியர் கேட்டதைக் காட்டிலும் அதிகமாக நான் கூறிவிட்டேன். ‘சித்ரா’ இதழின் வாசகர்கள் செரித்துக் கொள்ளக் கூடியதைக் காட்டிலும் அதிகமாக நான் நிறைய கூறிவிட்டேன் என்று நினைக் கிறேன்.
(இந்தக் கட்டுரை மராத்தி இதழான ‘சித்ரா’வில் 1938இல் தீபாவளி சிறப்பு மலரில் வெளியிடப்பட்டது. ஆதாரம் : டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு (தமிழ்) : தொகுதி 36, பக்கங்கள் 88-95)
-0-

8.இந்து சமூகத்தில் ஒரு வர்க்கத்தினர் மற்றொரு வர்க்கத்தினரின் சகோதரனாகவே முடியாது – III

இந்து சமூக அமைப்பு சகோதரத்துவத்தை ஏற்கிறதா? கிறித்துவர்களையும், முஸ்லிம்களையும் போலவே இந்துக்களும் மனிதர்கள் கடவுளால் படைக்கப்பட்டனர் என்று நம்புகிறார்கள். கிறித்துவர்களும், முஸ்லிம்களும் இதை முழு உண்மையாக ஏற்கிறார்கள். இந்துக்கள் இதை உண்மையின் ஒரு பகுதியாகக் கருதுகிறார்கள். முழு உண்மையில் இரு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி மனிதர்கள் கடவுளால் படைக்கப்பட்டனர் என்று கூறுவது. இரண்டாவது பகுதி கடவுள் தன் தெய்வீக உடம்பின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு மனித இனங்களைப் படைத்தார் என்பது. இந்துக்கள் இரண்டாம் பகுதியை முதற்பகுதியை விட முக்கியமானதென்றும், அடிப்படையானதென்றும் கருதுகின்றனர்.
இறைவன் தன் உடம்பின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனிதர்களைப் படைத்தார் என்னும் கோட்பாட்டை இந்து சமூக அமைப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது. தூய பவுல் (குt. கச்தடூ) அல்லது யாத்திரிகத் தந்தையர் கூறிய கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. பிராமணன் சத்திரியனின் சகோதரனாக மாட்டான். காரணம், பிராமணன் கடவுளின் வாயிலிருந்தும், சத்திரியன் தோளிலிருந்தும் படைக்கப்பட்டுள்ளனர். சத்திரியன் வைசியனுக்குச் சகோதரனாக முடியாது. காரணம், சத்திரியன் தோளிலிருந்தும் வைசியன் தொடையிலிருந்தும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு வர்க்கத்தினர் இன்னொரு வர்க்கத்தினரின் சகோதரனாக முடியாது. அவ்வாறே ஒரு வர்க்கத்தினன் இன்னொரு வர்க்கத்தினரின் பாதுகாவலனாகவும் இருக்க முடியாது.
தெய்வீக உடம்பின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு வர்க்கத்தினர் படைக்கப்பட்டுள்ளனர் என்னும் கோட்பாட்டின் விளைவாக, அந்தந்த வர்க்கத்தினர் தனித்தனியாகவும் தனித்தன்மையுடனும் இருக்க வேண்டுமென்பதுதான் கடவுளின் விருப்பம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்த நம்பிக்கைதான் ஒரு வர்ணத்தினர் சக இந்துக்களிலிருந்து தனித் தனியாகவும் வேறுபட்டு வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. உபநயனம் அல்லது உடம்பில் பூணூல் அணிவதுபற்றிய மநு ஸ்மிருதியின் விதிகளை ஒப்பு நோக்குக:
2:36 “கருத்தரித்த எட்டாம் ஆண்டில் பிராமணனுக்கும், பதினோராம் ஆண்டில் சத்ரியருக்கும் பனிரெண்டாம் ஆண்டில் வைசியருக்கும் உபநயனம் செய்விக்கப் பெறுதல் வேண்டும்.''
2:41 “வர்ண ஒழுங்கின்படி, மேலுடை முறையே கருப்புமான், புள்ளிமான், வெள்ளாட்டுக் கிடாவின் தோலாலும், கீழாடை சணல், நிலமலர்ச் செடித் தண்டு அல்லது சணல்நாரினாலும் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.''
2:42 “பிராமணனின் அரைக்கச்சை மூஞ்சாப்புல்லின் மூன்று இழைகளாலும், சத்திரியனின் அரைச்கச்சை வில்லின் நாண் இழைகளாலும் வைசியனின் அரைக்கச்சை சணல் நார் போன்ற இழைகளாலும் வைசியனின் அரைக்கச்சை சணல்நார் இழைகளாலும் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.''
2:43 “மூஞ்சாப் புல் கிடைக்கவில்லை என்றால், குசா, அஸ்மாந்தகா, பால்பகா இழைகளால் மூன்று முடிச்சு அல்லது குடும்ப வழக்கத்திற்கேற்ப அய்ந்து முடிச்சுகள் போட வேண்டும்.''
2:44 “பிராமணனின் பூணூல் பருத்தி இழையால் வலப்புறம் முறுக்கி முப்புரியாக அமைதல் வேண்டும். சத்திரியனுக்குச் சணல் நார் இழைகளும், வைசியனுக்கு வெள்ளாட்டு ரோம இழைகளும் பயன்படுத்தப் பெறுதல் வேண்டும்.''
2:45 “புனித சட்டத்தின்படி, பிராமணன் வில்வம் அல்லது பலாமரக்கொம்பையும், சத்திரியன் ஆல் அல்லது கருங்காலி மரக் கொம்பையும், வைசியன் பில்லு அல்லது அத்தி மரக் கொம்பையும் ஏந்திச் செல்லுதல் வேண்டும்.''
2:46 “பிராமணன் தலை முடிவரை நீண்ட கொம்பையும், சத்திரியன் தன் நெற்றிமட்டக் கம்பையும் வைசியன் மூக்குவரை நீண்ட கொம்பையும் ஏந்துதல் வேண்டும்.''
2:48 “விரும்பிய கொம்பினை ஏந்தி சூரியனை வழிபட்டு, அக்னி வலம் வந்த பின் வலக்கரம் நீட்டி மாணவன் யாசித்தல் வேண்டும்.''
2:49. “பவதி (வீட்டுத் தலைவி) என்னும் சொல்லைத் தொடங்கி (பவதி பிஷாந்தேகி என்று) பிராமணனும், சத்திரியனும் அச்சொல்லை (பிஷாம்பவதி தேகி என்று) நடுவில் இட்டும், வைசியன் அச்சொல்லை (தேகி பிஷாம் பவதி என்று) இறுதியில் வைத்தும் யாசித்தல் முறையாகும்.''
இவற்றைப் படிப்போர் இத்தகைய வேறுபாடுகள் இருப்பதற்கான காரணங்களை அறிய முயலலாம். இவை வேத பாராயணத்திற்குரிய பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பவருக்குரிய விதிகளாகும். ஏனிந்த வேறுபாடுகள்? பிராமணப் பையனின் கற்கும் வயது சத்ரியனைவிட, வைசியனை விட ஏன் வேறுபட வேண்டும்? – தொடரும்
-0-

9.இந்து சமூகத்தின் வர்க்கத்தைக் குறிக்கும் வர்ணமே சமூக அமைப்பின் அடிப்படை அலகாக உள்ளது – II

செயலுரிமை என்பது குறித்தவற்றைச் செய்வதற்குரிய பயனுள்ள அதிகாரத்தைக் குறிக்கிறது. பயன்படுத்தும் நடைமுறைகள் இல்லாத சுதந்திரம் என ஒன்று இருக்க முடியாது. சுரண்டல் ஒழிக்கப்பட்ட இடத்தில்தான்; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கியாள முடியாத இடத்தில்தான்; வறுமையும் வேலையின்மையும் இல்லாத இடத்தில்தான், தான் விரும்பிய செயலின் விளைவால், தன்வேலை, வீடு, உணவு ஆகியவற்றை இழந்து விடுவோமோ என்னும் அச்சம் இல்லாத இடத்தில்தான் உண்மையான செயலுரிமை இருக்க முடியும்.
அரசியல் சுதந்திரம் என்பது சட்டமியற்றுவதில் பங்கு கொள்வதற்கும், அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனி மனிதருக்குள்ள சுதந்திரமாகும். வாழ்வுரிமை, சுதந்திரம், இன்பநாட்ட முயற்சி போன்ற மாற்ற முடியாத உரிமைகளைத் தனிமனிதனுக்கு அளிப்பதற்காகவே அரசாங்கம் அமைக்கப்படுகிறது. எவருடைய உரிமைகளைக் காப்பதற்காக என்று அரசு அமைக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களிடமிருந்துதான் அரசு அதிகாரம் பெறுகிறது. எனவே, ஆளப்படுபவரின் ஒப்புதலின் பேரிலேயே அரசு அதிகாரியின் எல்லையும் இருப்பும் இயங்க வேண்டும் என்பதாகிறது.
மனித ஆளுமை, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளிலிருந்து பெறப்படுவதுதான் அரசியல் சுதந்திரம். அனைத்து அரசியலதிகாரமும் மக்களிடமிருந்தே பெறப்படுகிறது என்பதே இதன் பொருள். மேலும் பொதுவாழ்வையும், தனி வாழ்க்கையையும் மற்றவராலன்றித் தமக்குத் தாமே நிர்ணயித்துக் கொள்ளும் ஆற்றல் மக்களுக்கு உண்டு என்பதே இதன் பொருள். சுதந்திர சமூக அமைப்பின் இவ்விரு கோட்பாடுகளும் ஒன்றோடொன்று முழுமையான தொடர்புடையவை. முதற்கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டாலே இரண்டாவது கோட்பாடும் தானே பெறப்படுகிறது. மானுட ஆளுமையின் புனிதத்தன்மை ஏற்கப்படும்போதே, ஆளுமை வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலைக்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் தேவையும் ஏற்கப்பட வேண்டும்.
இந்தக் கோட்பாடுகளை இந்து சமூக அமைப்பு எவ்வளவு தூரம் ஏற்கிறது? இவ்விசாரணை அவசியமானதே. இக்கோட்பாடுகளை எந்த அளவுக்கு அது ஏற்கிறதோ, அந்த அளவுக்குதான் சுதந்திர சமூக அமைப்பு என்பதற்குரிய சிறப்புப் பெயரைப் பெற முடியும். இந்து சமூக அமைப்பு தனிமனிதனை ஏற்கிறதா? தனி மனிதனின் தனித்தன்மையையும், தார்மிகப் பொறுப்பையும் ஏற்கிறதா? தனக்குத்தானே வரம்பானவன், சட்டப்படியான தடைகள் எதுவுமின்றி அரசிற்கு எதிராகவும் உரிமைகளை உடையவன் என்பதை ஏற்கிறதா? இவ்விவாதத்தின் தொடக்கமாக வெளியேறிச் செல்லுமுன், ஜெகோவா எசேக்கியேலுக்கு கூறிய உரைகளைக் குறிப்பிடலாம்:
“அனைத்து ஆன்மாக்களும் என்னவை. பிதாவின் ஆன்மாவும் மகனின் ஆன்மாவும் ஒன்றே, பாவம் செய்யும் ஆன்மா மரிக்கிறது. தந்தையின் பாவத்திற்கு மகன் பொறுப்பல்ல; மகனின் பாவத்திற்கு தந்தை பொறுப்பல்ல; நேர்மையாளனின் நேர்மை அவனுக்கே உரியது – கெட்டவனின் கேடும் அவ்வாறே.''
இங்கு தனிமனிதனின் தனித்தன்மையும் அவனுக்குரிய தார்மிகப் பொறுப்பும் வலியுறுத்தப்படுகிறது. சமூக நோக்கத்திற்கு தனிமனிதனை மய்யப்படுத்தும் முறை இந்து சமூக அமைப்பில் இல்லை. இந்து சமூக அமைப்பு தனி மனிதர்களால் அல்லாமல் வர்க்கம் அல்லது வர்ணத்தின் அடிப்படையில் அமைந்தது. முதலில் இந்து சமூக அமைப்பு நான்கு வர்க்கங்களை அங்கீகரித்தது : 1. பிராமணர் 2. சத்திரியர் 3. வைசியர் 4. சூத்திரர். இன்று அய்ந்து வர்க்கங்கள் உள்ளன. அந்த அய்ந்தாவது வர்க்கத்தினர் பஞ்சமர் அல்லது தீண்டத்தகாதவர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்து சமூகத்தின் உறுப்பினர் தனி பிராமணரோ, தனி சத்திரியரோ, தனி வைசியரோ, தனி சூத்திரரோ, தனிப் பஞ்சமரோ அல்லர்.
திருமணத்திற்கும், வாரிசுரிமைக்கும் தவிர, ஏனையவற்றிற்கு குடும்பம் கூட, சமூகத்தின் அலகாகக் கருதப்படுவதில்லை. வர்க்கம் அல்லது இந்து சமூகத்தின் வர்க்கத்தைக் குறிப்பிடப் பயன்படும் கலைச் சொல்லாகிய வர்ணமே சமூக அமைப்பின் அடிப்படை அலகாக உள்ளது. இந்து சமூக அமைப்பில் தனிமனிதனின் திறமைக்கு இடமில்லை. தனி மனித நீதிக்கும் இடமில்லை. தனிமனிதனுக்கும் ஏதேனும் உரிமை இருக்குமாயின், அது தனிமனிதர் என்ற முறையில் வந்ததன்று, அவன் சார்ந்துள்ள வர்க்கத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான். தனிமனிதன் ஓர் உரிமையை அனுபவிப்பது அந்தத் தனிவர்க்கத்திற்குரியவன் என்பதால்தான். இதற்கு மாறாக, தனிமனிதன் தவறுபுரிந்து அதனால் துன்புற நேர்ந்தாலும் அது அவனது தனிப்பட்ட நடத்தையால் ஏற்பட்டதன்று. அவன் சார்ந்ததுள்ள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள இயலாமையே. அந்த இயலாமையின் காரணமாக ஏதாவது துன்புற நேர்தால் அது அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான்.
– தொடரும் 
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 96
-0-

10.கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் சமூக மாற்றம் இல்லாமல் போய்விடும்

இந்து சமூக அமைப்பின் குணாம்சம் என்ன? அது சுதந்திரமான சமூக அமைப்பா? இக்கேள்விக்கு விடை காண்பதற்கு முன், சுதந்திர சமூக அமைப்பின் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. நல்வாய்ப்பாக, இக்கருத்து விவாதத்திற்குரியதன்று. பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் சுதந்திர சமூக அமைப்பின் அடிப்படை இயல்புகளைப் பற்றி கருத்து மாறுபாடு எதுவுமில்லை. இந்த அடிப்படை இயல்புகள் பலவாக இருந்த போதிலும் இரு கூறுகள் அடிப்படையானவை. முதலாவதாக, தனி மனிதர் தனக்குத் தானே முடிவெல்லையாகிறார் என்பது. சமூகத்தின் குறிக்கோளும் நோக்கமும் தனிமனிதர் வளர்ச்சியும் அவர்தம் ஆளுமையின் மேம்பாடுமேயாகும். சமூகம் தனி மனிதனுக்கு மேலானதன்று. தனிமனிதர் சமூகத்தில் தன்னை உட்படுத்தினால், அது தன் மேம்பாட்டிற்காகவும், அவசியமான அளவிற்கும்தான்.
இரண்டாவது இன்றியமையாக் கூறு, சமூக வாழ்வில் உறுப்பினர்களிடையேயுள்ள உறவுகள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்னும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். சுதந்திர சமூக அமைப்பின் அடிப்படைக் கூறுகளாக இவ்விரண்டினையும் ஏன் கருதிட வேண்டும்? தனி மனிதரை சமூக நோக்கங்களுக்கான வழிமுறையாகக் கருதாமல், முடிந்த முடிவாக ஏன் கருதிட வேண்டும்? தனிமனிதர் உரிமைகளைக் காப்பதற்கு நாம் ஏன் நமது விலைமதிப்பற்ற உடைமைகளையும் உயிர்களையும் தியாகம் செய்ய வேண்டும்? இக்கேள்விக்கு விடை காண்பதற்கு முன், தனி மனிதர் என்று நாம் பேசும் பொழுது எப்பொருளில் பேசுகிறோம் என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும்...
சகோதரத்துவம் ஏன் இன்றியமையாதது?
ஒரு தனி மனிதன் மற்றவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி, உடன் வாழும் மனிதருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் மன நிலையே சகோதரத்துவம் எனப்படுவது. தூய பவுல் (St.Paul) இதனைச் சரியாக விளக்குகிறார் :
“மனித இனத்தவர் அனைவரும் ஒரே ரத்தத்தைச் சேர்ந்தவர்கள். யூதரென்றும் கிரேக்கரென்றும் எவருமில்லை. அடிமை என்றும் ஆண்டான் என்றும் ஆணென்றும் பெண்ணென்றும் கூட எவருமில்லை. அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றேயாவர்'' பிளைமவுத்தில் இறங்கிய பொழுது, யாத்திரிகத் தந்தையர் கூறியதும் இக்கருத்தையே: “இறைவனின் புனித உறுதிமொழி ஆவணப்படி, நாம் அனைவரும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டுள்ளோம். அதன்படி ஒவ்வொருவரின் நலனையும், ஒட்டுமொத்தமாக அனைவரின் நலனையும் காக்கக் கடமைப்பட்டுள்ளோம்.''
இவ்வணர்வுகள் சகோதரத்துவத்தின் சாராம்சமாகும். சகோதரத்துவம் கூடிவாழும் இயல்பை வலுப்படுத்துகிறது. நடைமுறையில் மற்றவர்களின் நலனில் ஒவ்வொருவரும் வலுவான ஆர்வம் கொள்கின்றனர். சகோதரத்துவம் மற்றவர்களின் நலன்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளச் செய்து, நடைமுறையில் பெரிதும் பிறர் நலன் பேணுகிறது. சகோதரத்துவ உணர்வுடைய தனிமனிதன் மற்றவரிடம் மரியாதை செலுத்துகிறான்.
வாழ்வதற்கு வேண்டிய நடைமுறைகளைக் கவனிப்பது போலவே, மற்றவர் நலன் பேணுவதும் இயல்பான, அவசியமான ஓர் கூறு ஆகிறது. பிறரிடம் முழுமையாகப் பரிவு காட்டாத ஒரு தனிமனிதன் பொதுநிலையில் ஒத்தியங்குவது இயலாத செயலாகும். சமூக உணர்வு வளர்ச்சி பெறாத தனிமனிதன் மற்றவரைத் தன்னுடைய நலன்களுக்கு எதிரானவர்களெனக் கருதி, மற்றவர்களைத் தோற்கடித்தால்தான் தான் வெற்றி பெற்று இன்புற்று வாழமுடியும் என்று நினைக்கிறான்.
சுதந்திரம் என்பது என்ன? சுதந்திர சமூக அமைப்பில் அது ஏன் இன்றியமையாததாகிறது? சுதந்திரம் இரு வகைப்படும்: சிவில் மற்றும், அரசியல் உரிமை. 1. சிவில் உரிமை என்பது சுதந்திரமாக இயங்கும் உரிமை. சட்டமுறைப்படியன்றி வேறுவகையில் சிறைப்படுத்த முடியாத நிலை 2. பேச்சுரிமை – சிந்தித்தல், எழுதுதல், படித்தல், விவாதித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 3. செயலுரிமை.
முதல் வகை சுதந்திரம் அடிப்படையானது. அடிப்படையானது மட்டுமன்று, அது இன்றியமையாததும்கூட. அதன் மதிப்பைப் பற்றி அய்யம் எதுவும் இருக்க முடியாது. இரண்டாவது வகைச் சுதந்திரத்தை கருத்துச் சுதந்திரம் எனலாம். பல காரணங்களுக்காக அது முக்கியமானது. சமூக, அரசியல், தார்மிக, அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கும் காரணமாவது. கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் சமூக நிலையில் மாற்றமின்றி ஒரே விதமாகவே இயங்கும். இதனால் மிகவும் அவசியமானவையாக இருப்பினும் கூட, புதுமையானவை அனைத்தும் நிராகரிக்கப்படும். செயல் உரிமை என்பது தான் நினைத்ததைச் செய்யும் உரிமை. செயலுரிமை ஏட்டளவில் இருந்தால் மட்டும் போதாது; அது உண்மையானதாகவும் இருத்தல் வேண்டும். 
-------------------------------------------------------------------------000-----------------------------------------------------------------------------

11.இந்து மதத்திற்குள் இருந்துகொண்டு பெயர்களை மாற்றிக் கொள்வதால் பிறவி இழிவு ஒழியாது – X

சமூகத்திலுள்ள மக்கள் எத்தனையோ விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எனவேதான் அனைத்து விளம்பரதாரர்களும் ஒரு நல்ல பெயரைத் தேர்ந்தெடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். பெயர் கவர்ச்சிகரமாக இல்லையென்றால் அந்தப் பொருள் மக்களிடம் விற்பனையாகாது.
'தீண்டத்தகாதவர்' என்ற பெயரானது ஒரு கெட்ட பெயராகும். அது அருவருப்பூட்டுகிறது; பயமுறுத்துகிறது; முடைநாற்றம் வீசுகிறது. தீண்டத்தகாதவர் என்ற பெயரிலிருந்தே தீண்டத்தகாதவர் குறித்து இந்துக்களின் சமூக அணுகுமுறை தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. 'தீண்டத்தகாதவர்' எவ்வளவு தகுதி பெற்றிருந்த போதிலும்கூட, மக்கள் தீண்டத்தகாதவர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகுதிகள் குறித்து ஆராய விரும்புவதில்லை. தீண்டத்தகாதோர் அனைவரும் இதை உணர்ந்துள்ளனர். 'தீண்டத்தகாதவர்கள்' என்பதைத் தவிர வேறு சில பெயர்களிலும் அவர்களை அழைக்க முயற்சி நடக்கிறது.
தங்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று அழைத்துக் கொண்டால் அது உடனே இந்துக்களின் ஆத்திரம் மற்றும் வெறுப்பிற்குத் தங்களை ஆட்படுத்திவிடும் என்பதைத் தீண்டத்தகாதவர்கள் அறிந்தே உள்ளனர். எனவேதான், அவர்கள் தங்களுக்கு வேறு பெயர்களை சூட்டிக்கொள்கின்றனர். இதன் மூலம் தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாதென்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் இது, பெரும்பாலும் இந்த நோக்கத்தில் முற்றிலும் தோல்வியடைந்து விடுகிறது...
ஏனென்றால், இந்துக்களுக்கு இந்துவாக இருப்பது என்பதே இறுதியான சமூக வகைப்பிரிவு அல்ல. இறுதியான வகைப்பிரிவு என்பது ஜாதி; உட்ஜாதி இருக்குமானால் உட்ஜாதி. இந்துக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்பொழுது, 'நீங்கள் யாரென்று நான் தெரிந்து கொள்ளலாமா?' என்ற கேள்வி கண்டிப்பாகக் கேட்கப்படும். 'நான் ஓர் இந்து' என்பது மட்டும் இந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதிலாக இருக்காது. இறுதியான விடையாகவும் அது கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அந்தக் கேள்வியானது மேலும் தொடரவே செய்யும்.
"இந்து' என்ற விடையைத் தொடர்ந்து அடுத்த கேள்வி வருவது நிச்சயம் : "என்ன ஜாதி?'' அதற்கான பதிலைத் தொடர்ந்து வேறொரு கேள்வி எழும் : "என்ன உட் ஜாதி?'' கேள்வி கேட்கப்பட்டவருடைய இறுதியான சமூக வகைப் பிரிவை – அது ஜாதியாக இருக்கலாம் அல்லது உட் ஜாதியாக இருக்கலாம் – தெரிந்த பின்னர்தான் கேள்வி கேட்பவர் நிறுத்துவார்.
புதிய பெயரைத் தனக்குச் சூடிக்கொள்ளும் தீண்டத்தகாதவர் தன்னை இனங்கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்கிறார். ஆனால், இடைவிடாமல் துளைத்துத் துளைத்து கேள்வி கேட்கப்படும்பொழுது புதிய பெயர் தனக்கு உதவவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார். அவ்வாறு கேட்கப்படும்பொழுது வேறு வழியின்றி தான் ஒரு தீண்டத்தகாதவர் என்பதை அறிவிக்கும்படி நேரிடுகிறது. தானாகவே தனது உண்மையான பெயரைச் சொன்னால் கேட்பவருக்கு ஏற்படும் கோபத்தைவிட தனது பெயரை மறைப்பதால் அதிக கோபத்திற்கு அவர் ஆளாகிறார்.
இந்த விவாதத்திலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன : ஒன்று, தீண்டத்தகாதவர்களின் தாழ்ந்த நிலை என்பது நாற்றமெடுக்கும் ஒரு பெயருடன் இணைந்தே தீரும். இந்தப் பெயர் மாற்றப்பட்டாலொழிய அவர்களுடைய சமூக நிலையில் உயர்வதற்கான சாத்தியப்பாடே இல்லை. இரண்டாவது விஷயம் என்னவென்றால் இந்துமத அரவணைப்புக்குள் இருந்து கொண்டு பெயரை மாற்றிக் கொள்வது எந்தப் பயனையும் தராது. அத்தகைய பெயருக்குள் ஊடுருவிப் பார்க்க ஓர் இந்து தவறமாட்டான் என்பதுடன் தீண்டத்தகாதவர் என்று கூறும்படிச் செய்துவிடுவான்.
பெயரில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அது பலவற்றைச் செய்யும். ஏனென்றால், பெயர் என்பது தீண்டத்தகாதவர்களின் சமூக நிலையில் ஒரு புரட்சியையே உண்டாக்க முடியும். ஆனால், அந்தப் பெயரானது இந்து மதக் கோட்பாடுகளுக்கு வெளியே உள்ளதும், அதனால் களங்கப்படுத்தி, தாழ்வடையச் செய்ய முடியாததுமான ஒரு சமூகக் குழுவின் பெயராக இருக்க வேண்டும். அந்தப் பெயர் தீண்டத்தகாதவர்கள் மதமாற்றத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்களுடைய சொத்தாக முடியும். இந்துமதக் கோட்பாடுகளுக்குள் இருந்து கொண்டு பெயர் மாற்றம் செய்வதென்பது ஒரு கள்ளத்தனமான மாற்றமாகும் என்பதுடன் அதனால் எவ்விதப் பயனும் இல்லை.
மதமாற்றம் குறித்த இந்த விவாதமானது ஓரளவு பொருளற்றதாகத் தோன்றக்கூடும். எந்த மதத்தை தீண்டத்தகாதவர்கள் ஏற்க விரும்புகிறார்கள் என்று தெரியும்வரை அது பொருளற்றதாகவே இருக்கும். மதமாற்றத்தினால் என்ன குறிப்பிட்ட நன்மை கிடைக்கும் என்பது தேர்ந்தெடுக்கப்படும் மதத்தையும், அந்த மதத்தினுடைய ஆதரவாளர்களின் சமூகத் தன்மையையும் பொருத்துள்ளது. இந்த அத்தியாயத்தின் ஆய்வுப் பொருளானது தீண்டாமை என்ற பிரச்சனையை மதமாற்றம் தீர்க்க முடியுமா என்பதுதான். – முற்றும்
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 419)
-0-

12.மதமாற்றத்தால் தீண்டத்தகாத மக்களின் சமூக நிலை உயரும் – IX

மதமாற்றத்திற்கு ஆதரவான வாதங்களில் குற்றம் குறை காண்பதற்காகப் பலர் காத்திருக்கும் நிலையில், சந்தேகத்தையோ, தவறான கருத்தையோ உருவாக்கிவிட எந்தவொரு வாய்ப்பையும் தராமல் இருப்பது நல்லது. எனவே, உறவு என்ற பந்தத்தை மதம் எவ்வாறு, எந்த முறையில் உருவாக்குகிறது என்பதை விளக்குவது நல்லது. இதற்கான விடை மிக எளிதானது. அது, ஒன்றாக உண்பதன் மூலமும், குடிப்பதன் மூலமும் அதைச் செய்கிறது. இந்துக்கள் தங்களுடைய சாதிய அமைப்புகளுக்கு ஆதரவாக வாதிடும்பொழுது சமபந்தி விருந்து என்பதை கேலி செய்கிறார்கள். அவர்கள் கேட்கிறார்கள் : சமபந்தி விருந்தில் என்ன இருக்கிறது?
அதில் அனைத்தும் இருக்கிறது என்பதுதான் சமூகவியல் கண்ணோட்டத்தில் இதற்குக் கூறப்படும் பதிலாகும். உறவு என்பது சகோதரத்துவம் என்பதன் சமூக ஒப்பந்தமாகும். அனைத்து ஆவணங்களையும் போல அது அனைவரையும் கட்டுப்படுத்து வதற்கு முன்பு கையொப்பம் இடப்பட்டு, முத்திரையிடப்பட்டு வெளியிடப்பட வேண்டும். கையொப்பமிடல், முத்திரையிடல் மற்றும் வெளியிடல் ஆகியவற்றுக்கான முறையானது மதத்தி னால் வகுக்கப்பட்டுள்ள முறையாகும்...
ambed_1_250தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கும், அதனால் ஏற்படும் இடையூறுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, வெறும் குடியுரிமை மட்டும் தீண்டத்தகாதவர்களுக்குப் போதாதென்றால், உறவுமுறை என்பதுதான் ஒரே தீர்வாக இருக்குமென்றால், யாருடைய உறவுமுறையை அவர்கள் விரும்புகிறார்களோ, அந்த சமூகக் குழுவின் மதத்தை தழுவுவதைத் தவிர வேறெந்த வழியும் கிடையாது.
இதுவரை முன்வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் தீண்டத்தகாத வர்கள் தனிமைப்படுத்தப் படுவதற்கு, மதமாற்றம் எவ்வாறு தீர்வாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதற்காகச் சொல்லப்பட்டது. ஆராய வேண்டிய வேறு இரண்டு கேள்விகளும் உள்ளன. முதலாவது கேள்வி மதமாற்றம் அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையைப் போக்குமா? இந்த கேள்விக்கு "ஆம்' என்ற பதிலைச் சொல்வதற்கு எவரும் தயங்க வேண்டியதில்லை. தீண்டத்தகாதவர்களின் தாழ்வுமனப்பான்மையானது, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது, அவர்களுக்கெதிராக பாரபட்சம் காண்பிக்கப்படுவது, நட்புறவற்ற சூழ்நிலை நிலவுவது போன்ற சமூக சூழ்நிலைகளின் விளைவாகும். இவைதாம், தான் உதவியற்றவன் என்ற உணர்வை தீண்டத்தகாதவர்களுக்கு ஏற்படுத்தி தாழ்வுமனப்பான்மைக்கு காரணமாகியுள்ளது. அது தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் சக்தியை அவர்களுக்கு இல்லாமல் செய்துவிடுகிறது.
தீண்டத்தகாதவர்களின் இந்த மனோபாவத்தை மதம் மாற்ற முடியுமா? மனோவியலாளர்களின் கருத்துப்படி, மதம் சரியான வகைப்பட்டதாயிருந்தால் இதைக் குணப்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள். அந்த மதமானது அந்த தனிநபரை தரந்தாழ்ந்த, பயனற்ற தாழ்த்தப்பட்டவர் என்று அணுகாமல் சமமான மனிதன் என்று அணுகினால்தான் இதைக் குணப்படுத்த முடியும். பிற மனிதர்களைப் போல தானும் சம உரிமை பெற்ற மனிதன்தான் என்று அவர் உணர்வதற்கான சாத்தியப்பாடுகளை கொண்டுள்ள ஒரு சூழ்நிலையை மதம் அளிக்க வேண்டும். அவ்வாறானால், தீண்டத்தகாதவர்கள் அத்தகைய மதத்திற்கு மாறுவது என்பது அவர்களுடைய தாழ்வு மனப்பான்மைக்குக் காரணமான மிக நீண்ட காலத்திய நம்பிக்கையின்மையை ஏன் அகற்ற முடியாது?...
மதமாற்றம் என்பது தீண்டத்தகாத மக்களின் பொதுவான சமூக நிலையை உயர்த்துமா என்பதற்கு இருவேறு பதில்கள் இருக்க முடியாது.
ஒரு பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு ஷேக்ஸ்பியரின் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் விடையானது, பெயர் தொடர்புடைய பிரச்சினை போதுமான அளவு புரிந்துகொள்ளப்படவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு ரோஜாவை மற்றொரு பெயரில் அழைத்தாலும் அது மணக்கும் என்று கூறுவது எப்பொழுது உண்மையாகும் என்றால், பெயர்களுக்கு எவ்வித நோக்கமும் இல்லாமல் மக்கள் பெயர்களை மட்டுமே சார்ந்திராமல் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராயும் சிரமத்தை எடுத்துக்கொண்டு தங்களுடைய கருத்து களையும், அணுகுமுறைகளையும் உருவாக்கிக் கொள்ளும்போதுதான் அது உண்மையாகும்.
கெடுவாய்ப்பாக, பெயர்கள் ஒரு முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளன. அவை சமூக, பொருளாதார நிலையில் ஒரு மகத்தான பங்கை வகிக்கின்றன. பெயர்கள் என்பவை அடையாளக் குறியீடுகள். ஒவ்வொரு பெயரும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய குறிப்பிட்ட கருத்துகளையும் எண்ணப்போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அது ஓர் அடையாளச் சீட்டு. இந்த அடையாளச் சீட்டிலிருந்து அது என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்கிறார்கள். தனித்தனியாக ஒவ்வொன்றையும் ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட பொருளுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் கருத்துகளும், எண்ணப்போக்குகளும் உண்மையானவைதானா என்று தங்களுக்குத் தாங்களே தீர்மானிக்கும் சிரமத்திலிருந்து அது அவர்களை காக்கிறது.
– தொடரும்
-0-

13.இந்துக்களின் வெறுப்பு மற்றும் விரோதமே தீண்டத்தகாத மக்களை தனிமைப்படுத்துகிறது – VIII

தனிமைப்படுத்தப்படுதல் என்பதன் சாதகமற்ற தன்மைகளையும், உறவுமுறை என்பதன் சாதகத் தன்மைகளையும் புரிந்து கொண்டுள்ள அனைவரும் இந்த முயற்சி ஒரு பொருளற்ற முயற்சி அல்ல என்பதை ஏற்றுக் கொள்வர். தனிமைப்படுத்தப்படுதலின் விளைவுகள் என்ன? தனிமைப்படுத்தப்படுதல் என்பது சமூக இன ஒதுக்கல், சமூக அவமரியாதை, சமூக பாரபட்சம் மற்றும் சமூக அநீதி என்றே பொருள்படும். தனிமைப்படுத்தப்படுதல் என்பது பாதுகாப்பு மறுப்பு, நீதி மறுப்பு, வாய்ப்பு மறுப்பு என்றே பொருள்படும். தனிமைப்படுத்தப்படுதல் என்பது அனுதாபமின்மை, நட்புறவின்மை, கவனிப்பின்மை என்றே பொருள்படும். இன்னும் சொல்லப்போனால், தனிமைப்படுத்தப்படுதல் என்பது இந்துக்களின் இயல்பான வெறுப்பு மற்றும் விரோதம் என்றே பொருள்படும். மறுபுறத்தில் இதர சமூகக் குழுவுடன் உறவு கொள்வதன் மூலம் அந்த சமூகக் குழுவிற்குள் சமூக அந்தஸ்து, சமப் பாதுகாப்பு மற்றும் சமநீதியைப் பெறமுடியும் என்பதோடு, அதனுடைய அனுதாபத்தையும், நல்லெண்ணத்தையும் ஈட்ட முடியும்.
எதிர்ப்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இது முழுமையான விடை என்று நான் துணிந்து கூறுகிறேன். மதமாற்றம் மூலம் தீண்டத்தகாத மக்கள் என்ன பலன் பெறமுடியும் என்பதை அது வெளிப்படுத்துகிறது. இந்த விஷயத்தை மேலும் முன்னெடுத்துச் சென்று, மதம் மாறுவதை எதிர்ப்பவர்கள் இதுவரை எழுப்பி இராத, ஆனால் எழுப்பப்படக்கூடிய கேள்விக்கும் பதிலளித்துவிடுவது விரும்பத்தக்கது. கேள்வி இதுதான் : உறவுமுறையை உருவாக்க மதமாற்றம் தேவைதானா? ஒரு சமூகக் குழுவிற்கும், ஒரு சமுதாயத்திற்கும் அதே போன்று உறவுமுறைக்கும், குடியுரிமைக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்பதை மனதில் கொண்டால் இந்தக் கேள்விக்கான விடை வெளிப்படும்.
ஒரு சமூகம் என்று சொன்னால், அது உறவுமுறைகளின் ஓர் அமைப்பு என்றே திட்டவட்டமாகப் பொருள்படும். ஒரு சமுதாயம் என்பது பல சமூகக் குழுக்களின் ஒரு தொகுப்பு ஆகும் அல்லது பல்வேறு உறவு வகைப்பட்ட அமைப்புகளாகும். ஒரு சமூகத்தை ஒன்றாக வைத்திருக்கும் உறவை குடியுரிமை என்கிறோம்.
ஒரு சமுதாயத்தில் குடியுரிமையைப் பெறுவதற்கான வழி வகைகள் என்பது, ஒரு சமூகக் குழுவினுள் உறவுமுறையைப் பெறுவதற்கான வழிவகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. குடியுரிமை என்பது, அங்கேயே வசித்துவரும் தன்மையினால் பெறப்படுவது ஆகும். குடியுரிமையைப் பெறுவதற்கான முன்நிபந்தனையானது, அரசாங்கத்திற்கு அரசியல் விசுவாசம் செலுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதாகும். உறவுமுறையைப் பெறுவதற்கான முன்நிபந்தனையானது முற்றிலும் வேறுபட்டது. மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் ரத்த ஒற்றுமை என்பது, உறவுமுறையாக ஏற்றுக் கொள்வதற்கான முன் நிபந்தனையாக இருந்தது. ஏனென்றால் உறவுமுறை என்பது, ஒரே மூதாதையரில் இருந்து தோன்றியுள்ளவர்கள் என்றும் அதனால் தங்களது ரத்த நாளங்களில் ஒரே ரத்தத்தை கொண்டிருப்பதாகவும் கருதும் நபர்களைக் கொண்ட அமைப்பு. ஒவ்வொரு குழுவும் உண்மையிலேயே ஒரே மூதாதையரில் இருந்து தோன்றியுள்ளதா என்பதைப்பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை.
உண்மையில் ஒரு குழுவானது, ஓர் அயலவர் அதே மூதாதையரில் இருந்து தோன்றியிருக்கவில்லை என்றபோதிலும்கூட, அவரைத் தங்கள் உறவுமுறைக்குள் சேர்த்துக் கொள்வதுண்டு. ஓர் அயலவர் ஏழு தலைமுறைகளாக ஒரு குழுவுடன் திருமண உறவு கொண்டிருந்தால், அவர் இந்த உறவுமுறையின் உறுப்பினராகிவிடுவார் என்று ஒரு விதி இருந்தது என்பது ஒரு சுவாரசியமான விஷயமாகும். இது கற்பனைக் கதை என்றபோதிலும், உறவுமுறைகள் சேர ரத்த ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற முன்நிபந்தனை தேவையாய் இருந்திருக்கிறது.
மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் பிந்தைய கட்டத்தில் ரத்த ஒற்றுமைக்குப் பதிலாக, பொதுவான மதம் என்பது உறவு என்பதற்கான முன்நிபந்தனையாக மாறியது. இது தொடர்பாக, பேராசிரியர் ராபர்ட்சன் ஸ்மித் சுட்டிக்காட்டிய முக்கியமான அம்சத்தை நினைவிற் கொள்வது அவசியமாகிறது. ஒரு சமுதாயத்தில் சமூக அமைப்பு என்பது மனிதர்களைக் கொண்டு மட்டும் உருவாக்கப்பட்டதல்ல; அது கடவுளர்களையும், மனிதர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆகையால் ஒரு சமூகக் குழுவில் நுழைந்து உறவுமுறை பந்தத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புகின்ற எவர் ஒருவரும், அந்த சமூகக் குழுவின் கடவுளையோ, கடவுளர்களையோ ஏற்றுக் கொள்வதன் மூலம் மட்டுமே அதில் நுழைய முடியும்.
பழைய ஏற்பாட்டில் நவோமி ரூத்திடம் கூறுகிறார்: “உன்னுடைய சகோதரி அவளுடைய மக்களிடமும், அவளுடைய கடவுளர்களிடமும் திரும்பிச் சென்றுவிட்டாள்.'' அதற்கு ரூத்தினுடைய பதில்: “உன்னுடைய கடவுள் என்னுடைய கடவுள்.'' இதுவும் மொபைட்டுகளைக் செமோசினுடைய மகன்கள் என்றும் மகள்கள் என்றும் அழைப்பதும், ஒரு சமூகத்தில் உறவுமுறை என்ற பந்தமானது, ஒரு பொதுவான மதத்தின்பால் அவர்கள் வைத்துள்ள விசுவாசத்தின் விளைவாகவே ஏற்படுகிறது என்பதற்கான சாட்சியங்களாக அமைந்துள்ளன. பொதுவான மதமின்றி எந்தவொரு உறவும் இருக்க முடியாது.
– தொடரும்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 416
-0-

14.தீண்டாமையைக் கடைபிடித்த முகமதியர்கள்!

நான் ஒப்புக் கொண்டால் ஒரு சுற்றுலா செல்ல விரும்புவதாக, எங்கள் இயக்கத்தின் சகதோழர்கள் சிலர் 1934இல் தெரிவித்தார்கள்; நானும் ஒப்புக் கொண்டேன். வெரூலில் உள்ள புத்தமதக் குகைகளையும் நமது சுற்றுப்பயணத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நாசிக்குச் சென்று மற்றவர்களுடன் நான் சேர்ந்து கொள்வது என்று ஏற்பாடு ஆயிற்று. வெரூல் செல்ல நாம் அவுரங்காபாத் செல்ல வேண்டும். அய்தராபாத் மேதகு நிஜாம் அவர்களின் மகமதிய சமஸ்தானத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு நகரம் அவுரங்காபாத்.
அவுரங்காபாத் செல்லும் முன் தவுலாபாத் என்னும் மற்றொரு நகரத்தை நாம் கடக்க வேண்டும்; இதுவும் நிஜாமின் அய்தராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. தவுலா பாத் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரம்; புகழ் பெற்ற இராம்தியோ ராய் என்ற இந்து மன்னரின் தலைநகராக அது ஒரு காலத்தில் விளங்கியது. தவுலாபாத் கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நினைவுச் சின்னம் என்பதால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதைக் காணத் தவறுவதில்லை. அதன்படி தவுலாபாத் கோட்டையைப் பார்ப்பது என்பது எங்கள் பயணத் திட்டத்திலும் சேர்க்கப்பட்டது.
சில சுற்றுலாக் கார்களையும் பேருந்துகளையும் நாங்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் மொத்தம் 30 பேர் இருந்தோம். நாங்கள் நாசிக்கில் இருந்து புறப்பட்டு அவுரங்காபாத் செல்லும் வழியில் உள்ள யியோலாவுக்குச் சென்றோம். எங்களது சுற்றுப்பயணத்தை நாங்கள் வேண்டுமென்றே வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நாட்டின் புறநகர்ப் பகுதிகளில் தீண்டத்தகாத மக்கள் எதிர்கொள்ள வேண்டிய இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் யார் என்பது வெளியில் தெரியாதவாறு பயணம் செய்ய விரும்பினோம். நாங்கள் தங்குவது என்ற முடிவு செய்த இடங்களில் இருக்கும் எங்கள் மக்களுக்கு மட்டும் நாங்கள் எங்கள் பயணத் திட்டத்தைத் தெரிவித்திருந்தோம். அதனால் நிஜாம் சமஸ்தானத்தில் பல கிராமங்களை நாங்கள் கடந்து சென்றபோது எங்கள் மக்கள் எவரும் வந்து எங்களைச் சந்திக்கவில்லை. ஆனால் நாங்கள் வருகிறோம் என்று தவுலாபாத் நண்பர்களுக்குத் தெரிவித்து இருந்ததால், எங்களை எதிர்பார்த்து அவர்கள் நகரின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். வண்டியிலிருந்து இறங்கி, தேநீரும் சிற்றுண்டியும் அருந்திவிட்டு, பின்னர் கோட்டையைக் காணச் செல்லலாம் என்று அவர்கள் கூறினார்கள். எங்களுக்கு அப்போது தேநீர் மிகவும் தேவையாக இருந்தபோதும், இருட்டும் முன் கோட்டையைக் காண, போதிய நேரம் தேவை என்று கருதியதால் அதனை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் உடனே கோட்டைக்குப் புறப்பட்ட நாங்கள் திரும்பி வரும்போது தேநீர் அருந்துவதாக அவர்களிடம் கூறினோம். அதன்படி எங்கள் ஓட்டுநர்களை விரைந்து செல்லும்படி கூறினோம்; கோட்டை வாயிலுக்குச் சில நிமிடங்களில் நாங்கள் வந்து சேர்ந்தோம்.
அந்த மாதம் மகமதியர்களுக்குப் புனிதமான ரம்ஜான் மாதமாக இருந்தது. கோட்டை வாயிலுக்கு எதிரில் விளிம்பு வரை நீர் நிறைந்த ஒரு குளம் இருந்தது. அதனைச் சுற்றி ஒரு கல்நடைபாதை இருந்தது. பயணத்தின்போது எங்கள் உடைகளும், உடலும், முகமும் தூசு படிந்து அழுக்காகி இருந்தபடியால், நாங்கள் முகம் கழுவிக் கொள்ள விரும்பினோம். அதிகமாக யோசனை செய்யாமல், எங்களில் சிலர் அந்தக் குளத்தின் கரையில் நின்று கொண்டே தங்களின் முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டனர். பின்னர் நாங்கள் கோட்டை வாயிலுக்குச் சென்றோம். கோட்டையினுள் ஆயுதந்தாங்கிய இராணுவ வீரர்கள் இருந்தனர். பெரிய கதவுகளைத் திறந்து அவர்கள் எங்களை உள்ளே செல்லவிட்டனர். கோட்டையினுள் செல்வதற்கு அனுமதி பெற என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்குப் பின்னாலிருந்து, அந்தத் தீண்டத்தகாதவர்கள் குளத்தை அசுத்தப்படுத்தி விட்டார்கள் என்று கத்திக் கொண்டு நரைத்துப் போன தாடி கொண்ட ஒரு வயது முதிர்ந்த மகமதியர் வந்தார். உடனே அங்கிருந்த மகமதிய இளைஞர்கள், முதியவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கொண்டு எங்களைத் திட்டத் தொடங்கினர். "தீண்டத்தகாதவர்களுக்கு மிகவும் திமிராகி விட்டது. தங்களின் இழிந்த ஜாதியையும், தாங்கள் அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டும் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்" என்று எங்களை அவர்கள் பயமுறுத்துவது போல் பேசிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் வெளியூர்க்காரர்கள் என்றும், உள்ளூர்ப் பழக்க வழக்கங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றும் நாங்கள் கூறினோம். அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த உள்ளூர்த் தோழர்கள் மீது அவர்கள் கோபம் திரும்பியது. இந்தக் குளத்தைத் தீண்டத்தகாதவர்கள் பயன்படுத்த முடியாது என்று நீங்கள் ஏன் இந்த வெளியூர்க்காரர்களுக்குக் கூறவில்லை என்ற கேள்வியை அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் குளத்துக்குப் போனபோது அவர்கள் அங்கே வந்தே சேரவில்லை. எங்கள் தவறு அல்ல என்று அவர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். எதையும் கேட்காமல் செய்தது எங்கள் குற்றம்தான் அது. ஆனால் மகமதியர்கள் எனது விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. எங்களை அவர்கள் தொடர்ந்து இழிவான சொற்களில் திட்டிக்கொண்டே இருந்தது எங்களை வெறுப்படையச் செய்தது. வெகு எளிதாக அங்கே கலகம் ஏற்பட்டு அதனால் மரணம் கூட சம்பவித்திருக்க இயலும். என்றாலும் நாங்கள் ஒருவாறு எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம். எங்களது சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் எந்தக் குற்றவியல் வழக்கிலும் சிக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அங்கிருந்த ஒரு மகமதிய இளைஞர் கூறிக் கொண்டே இருந்தான். ஒரு பொதுக் குளத்திலிருந்து தீண்டத் தகாதவர்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதையே அவன் குறித்துக் கூறினான். எனது அமைதியை இழந்த நான் அவனிடம் கோபமான குரலில், அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக் குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா? என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர். காவல்காரரிடம் திரும்பிய நான் கோபமாகவே கேட்டேன், கோட்டைக்குள் நாங்கள் போக முடியுமா, முடியாதா என்று சொல். போகமுடியாது என்றால் இங்கே நின்றுகொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை என்று கேட்டேன். என் பெயரைக் கேட்ட அவர், நான் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டு கோட்டைக் கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று பின்னர் திரும்பி வந்தார். கோட்டைக்குள் போகலாம் என்று எங்களிடம் கூறிய காவலர், கோட்டைக்குள் எந்த இடத்தில் இருக்கும் தண்ணீரையும் நாங்கள் தொடக்கூடாது என்று கூறினார். அதை நாங்கள் மீறிவிடாமல் இருக்க, எங்களுடன் ஒரு ஆயுதந்தாங்கிய வீரர் அனுப்பப்பட்டார்.
ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் எவ்வாறு ஒரு பார்சிக்கும் தீண்டத்தகாதவர் ஆகிறார் என்பதற்கு நான் ஓர் எடுத்துக்காட்டு அளித்திருந்தேன். இப்போது இந்த நிகழ்ச்சி ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் ஒரு மகமதியருக்கும் தீண்டத்தகாதவரே என்பதைக் காட்டுகிறது.
----------------------
"விசாவுக்காக காத்திருக்கிறேன்" என்னும் நூலிலிருந்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவலைகள் ....
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா
-0-

15.தாழ்த்தப்பட்டவர்கள், ஜாதியை அங்கீகரிக்காத சமூகக் குழுவுடன் இணைந்தாக வேண்டும் – VII

உறவுமுறை என்பதையும், அதில் என்ன தொக்கியுள்ளது என்பதையும் பின்வரும் வார்த்தைகளில் பேராசிரியர் ராபர்ட்சன் சுமித் விவரிக்கிறார் : “ஓர் உறவுமுறை குழு என்பது வாழ்வில் ஒன்றாகப் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிற நபர்களின் குழுவாகும். இதை இயற்பியல் ஒற்றுமை எனலாம். அவர்கள் ஒரே பொதுவான வாழ்க்கையின் பகுதிகளாகக் கருதப்படலாம். உறவுமுறைக் குழுவின் உறுப்பினர்கள், ஒன்றாக வாழக்கூடிய ஒருவராகவே தங்களைக் காண்கின்றனர். ரத்தம், சதை, எலும்புகளைக் கொண்ட ஓர் உயிருள்ள மனிதத் திரளாகவே கருதுகின்றனர். இதில் அனைத்து உறுப்பினர்களையும் பாதிக்காமல் எந்த உறுப்பினரையும் தொட முடியாது.''
இந்த விஷயத்தை தனிநபர் என்ற நிலையிலிருந்தும், அதைப் போன்றே குழுவின் கண்ணோட்டம் என்ற நிலையிலிருந்தும் காண முடியும். குழுவின் கண்ணோட்டம் என்ற நிலையிலிருந்து காணும்பொழுது, உறவுமுறை குழு என்பது ஒருவரை வெறும் தனிநபராகப் பார்க்காமல் – அவர் முதலாவதாகவும், முதன்மையாகவும் ஒரு குழுவின் உறுப்பினர் என்றே உணரப்படுகிறது. தனிநபர் நிலையிலிருந்து காணும்பொழுது, அந்தக் குழுவுடன் அவருக்குள்ள உறவால் கிடைக்கும் நன்மையானது, ஒரு குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்த உறுப்பினருக்கு என்னென்ன நன்மைகள் கிட்டுகின்றனவோ அவற்றைவிடக் குறையாத, அவற்றிலிருந்து வேறுபடாத அளவுக்கு குழுவிடமிருந்தும் கிடைக்கின்றன. குடும்ப வாழ்க்கையானது, பெற்றோருடைய பாசம் மற்றும் பரிவினால் குணாம்சப்படுத்தப்படுகிறது.
சமுதாயம் என்பதிலிருந்து சமூகம் என்பதைத் தனித்து வைத்துப் பார்த்தால், அது ஒரு விரிவடைந்த குடும்பமாகவே இருக்கும். அவ்வாறான நிலையில், ஒரு குடும்பத்தில் காணப்படும் அனைத்து நல்ல குணங்களையும் கொண்டதாகவே அந்த சமூகக் குழு குணாம்சப்படுத்தப்படும். ஒரு சமூகக் குழுவினுள் உறவுமுறை காரணமாக உறவினர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்களிடையே எவ்விதப் பாகுபாடும் கிடையாது. அதற்குள் இருக்கிற ஒவ்வொருவரும் பிறருக்கு உள்ளதைப் போன்றே அனைத்து உரிமைகளிலும் சரி சமமானவர்கள் என்று சமூகக் குழு அங்கீகரிக்கிறது...
...உறவுமுறை என்பது, இன்று தாழ்த்தப்பட்டவர்கள் தன்னந்தனியாக அனுபவிக்க வேண்டியுள்ள இந்துக்களின் கொடுங்கோன்மையையும் ஒடுக்குமுறைகளையும் சந்திப்பதற்காக உறவுமுறைப்பட்ட சமூகக் குழுவின் ஆதரவைப் பெற துணைபுரிகிறது. மற்றொரு சமூகக் குழுவுடன் உறவு என்பது சிறந்த பாதுகாப்பாகும். தாழ்த்தப்பட்டவர்கள் இந்து கொடுங்கோன்மை மற்றும் இந்து ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
உறவுமுறை என்பதன் பொருள் என்ன, அது என்ன செய்கிறது என்று மேலே தரப்பட்டுள்ள விளக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் எவரொருவரும் இக்கருத்துரையை ஏற்றுக் கொள்ளுவதற்கு எவ்விதச் சிரமமும் இருக்காது. அதாவது, தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால், சாதியை அங்கீகரிக்காத மற்றொரு சமூகக் குழுவுடன் சேர்ந்தாக வேண்டும் என்பதே அந்தக் கருத்துரை.
உறவுமுறை என்பது தனிமைப்படுத்துதலுக்கு நேர் எதிரானது. மற்றொரு சமூகக் குழுவுடன் தாழ்த்தப்பட்டவர்கள் உறவுமுறையை நிறுவிக் கொள்வது என்பது, தங்களுடைய தற்போதைய தனிமைபடுத்தலுக்கு முடிவு கட்டுவது என்பதையே குறிக்கும். அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை, அவர்களுடைய தனிமைப்படுத்துதல் என்பது ஒருபோதும் முடிவடையாது. இந்துக்கள் என்ற முறையில் அவர்களுடைய தனிமைப்படுத்துதலானது, அவர்களை முன்னாலும் தாக்குகிறது; பின்னாலும் தாக்குகிறது.
அவர்கள் இந்துக்கள் என்றபோதிலும்கூட அவர்கள் முஸ்லிம் மக்களிடம் இருந்தும், கிறித்துவர்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனென்றால், இந்துக்கள் என்ற முறையில் அவர்கள் இந்துக்களுக்கும் அதைப் போன்றே இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் அந்நியமானவராகி விடுகின்றனர். இந்தத் தனிமைப்படுத்துதலுக்கு முடிவு கட்ட ஒரேயொரு வழிதான் உள்ளது. இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. இந்து அல்லாத ஏதாவதொரு சமூகக் குழுவுடன் இணைந்து அதனுடைய உறவுமுறையாக ஆகிவிடுவது என்பதுதான் அந்த வழி.
தனிமைப்படுத்தப்படுதல் என்பதன் சாதகமற்ற தன்மைகளையும், உறவுமுறை என்பதன் சாதகத் தன்மைகளையும் புரிந்துள்ள அனைவரும் இந்த முயற்சி ஒரு பொருளற்ற முயற்சி அல்ல என்பதை ஏற்றுக் கொள்வர். தனிமைப்படுத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? தனிமைப்படுத்தப்படுதல் என்பது, சமூக இன ஒதுக்கல், சமூக அவமரியாதை, சமூக பாரபட்சம் மற்றும் சமூக அநீதி என்றே பொருள் படும்.
– தொடரும்
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 414)
-0-

16.மதம் – தான் ஏற்றுக் கொண்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றியுள்ளதா? – IV

  மதம் என்பது அதீத சக்தியிலிருந்து தோன்றியது அல்லது மந்திரத்திலேயே அது அக்கறை கொண்டுள்ளது என்று கருதுவதைப் போன்ற பெரிய தவறு வேறெதுவும் இருக்க முடியாது. பழங்குடிச் சமூகம் மந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது, அமானுஷ்ய சக்தி (பேய், பிசாசு) என்பதில் நம்பிக்கை வைக்கிறது, குலமரபுச் சின்னங்களை வணங்குகிறது என்பது உண்மையே. ஆனால் இவைதான் மதம் என்றோ, மதத்தின் ஆதாரமாக அமைந்துள்ளன என்றோ எண்ணுவது தவறான தாகும். இத்தகைய கண்ணோட்டத்தைக் கொள்வதென்பது, தற்செயலான ஒன்றை கோட்பாடு என்ற நிலைக்கு உயர்த்துவதாகும்.
பழங்குடி மதத்தின் முதன்மை அம்சம் வாழ்க்கை, மரணம், பிறப்பு, திருமணம் போன்ற மனித வாழ்வின் அடிப்படை அம்சங்களாகும். மந்திர தந்திரம், அமானுஷ்ய சக்தி, குலமரபுச் சின்னம் போன்றவை இறுதியானவை அல்ல. அவை வழிமுறை மட்டுமே. வாழ்க்கை மற்றும் அதைப் பாதுகாப்பது என்பவை மட்டுமே முடிவானவையாகும்.
பழங்குடிச் சமூகமானது மந்திர தந்திரம், அமானுஷ்ய சக்தி போன்றவற்றை கடைப்பிடித்து அதனுடைய நலன் கருதி செய்யப்பட்டதல்ல. ஆனால் வாழ்வைப் பாதுகாக்கவும், தீயசக்திகள் வாழ்விற்கு தீங்கிழைத்துவிடாமல் அவற்றை விரட்டுவதற்காகவும்தான். அறுவடை, பஞ்சம் போன்றவற்றைத் தொடர்ந்து மதச்சடங்குகள் போன்றவை நடத்தப்படுவது ஏன்? பழங்குடிச் சமூகத்திற்கு தந்திரம், அமானுஷ்ய சக்தி, குலமரபுச் சின்னங்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன? அவை அனைத்தும் வாழ்க்கையைப் பாதுகாப்பதை பாதிக்கின்றன என்பதே ஒரே விடையாகும். வாழ்க்கைப் போக்கும், அதைப் பாது காப்பதுமே முக்கிய நோக்கமாக அமைகின்றன.
வாழ்க்கை என்பதும் அதைப் பாதுகாப்பது என்பதும்தான் பழங்குடிச் சமூகத்திலிருந்த மதத்தின் முக்கிய அம்சமும், மய்யக் கருத்துமாகும். மந்திர தந்திரம் இருந்த இடத்தை இன்று கடவுள் எடுத்துக் கொண்டதால் அது, மதத்தில் கடவுளுக்குள்ள இடமானது வாழ்வைப் பாதுகாப்பதற்கான வழி என்ற அம்சத்தையும், மதத்தின் குறிக்கோள் மற்றும் அதற்காகவே அர்ப்பணித்துக் கொள்வது என்ற அம்சத்தையும் மாற்றி விடாது. மதத்தை தனிநபருடைய தனிப்பட்ட விஷயம் என்றோ, தனிநபர் மட்டுமே தொடர்புடையது என்றோ கருதுவது தவறானதாகும் என்ற அம்சத்தைக் குறித்து கவனத்தை ஈர்ப்பது அவசியம். முன் சொன்ன விவாதங்களும் இதற்கு முழு ஆதரவு அளிக்கின்றன. சொல்லப்போனால், பின்னால் குறிப்பிடுவது போல மதம் என்பது தனிநபருடைய, தனிப்பட்ட, தனிநபர் மட்டுமே தொடர்புடையதாக மட்டுமே இருந்தால், அது ஆபத்தாகக் கருதப்படாவிட்டாலும் உண்மையிலேயே கெடுதல் செய்வதாகும்.
மதம் என்பது, தனிநபருடைய இயல்பான தன்மையில் உள்ளடங்கியுள்ள சிறப்பான மத உள்ளுணர்வை மலரச் செய்வதுதான் என்று கருதுவதும் அதேபோன்று தவறானதுதான். மதம் என்பது மொழியைப் போன்று சமூகத்தன்மை வாய்ந்ததாகும் என்பதுதான் சரியான கண்ணோட்டமாகும். ஏனென்றால், இவ்விரண்டுமே சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. தனிநபர் அதைப் பெற்றிருக்க வேண்டும்; அதில்லாமல் அவன் சமூக வாழ்வில் பங்கேற்க முடியாது. மதம் என்பது முக்கியமாக சமூகம் தொடர்புடையதாக இருப்பதால், அது சமூகத்தன்மை கொண்டது என்று சொல்லும்போது இயல்பாகவே ஒரு கேள்வி கேட்கத் தோன்றும். மதத்தின் நோக்கம் என்ன, அதன் செயல்பாடு என்ன என்ற கேள்வி எழும்...
முன்சொன்ன விவாதமானது, மதம் என்பது ஒரு சமூக அம்சம் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக நடத்தப்பட்ட போதிலும், மதம் என்பது ஒரு திட்டவட்டமான சமூக நோக்கத்தையும், அதே போன்று திட்டவட்டமான சமூக செயல்பாட்டையும் கொண்டுள்ளது. ஒரு நபர் ஒரு மதத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அந்த மதம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட நோக்கங்களை எந்த அளவிற்கு நிறைவேற்றியுள்ளது என்று கேள்வி கேட்கும் உரிமை முறையானது என்று கூறுகிறது. இக்காரணத்தினால்தான் கிறித்துவ மதத்தைவிட மெய்விளக்கக் கோட்பாடு என்ற கருத்து உயர்வானது என்று அதை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால் அந்தக் கருத்தைக் கொண்டிருந்தவர்களிடம் பெல்போர்டு பிரபு கேட்ட கேள்வி நியாயமானது. அவர் சுருக்கென்று இவ்வாறு கேட்டார் :
‘அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக அல்லல்பட்டு போராடிக் கொண்டிருக்கின்ற தெளிவற்ற மக்கள் கூட்டத்திற்கு மெய்விளக்கக் கோட்பாடு என்ன சொல்லவிருக்கிறது? ‘மனித சமூகம்' என்ற மகத்தான நாடகத்தில் அவர்களுக்குரிய பங்கை யோசிப்பதற்குக்கூட ஓய்வோ, விருப்பமோ இல்லாத, ஆனால் தன்னுடைய நலனையும், முக்கியத்துவத்தையும் காண வியப்படையும் அவர்களுக்கு என்ன சொல்லவிருக்கிறது? இவ்வுலகை உருவாக்கிய அவனது பார்வையில் எந்த மதிப்பையும் பெறமுடியாத அல்லது இந்த உலகியல் அமைப்புமுறை ஒன்றுமில்லாததாக நொறுங்கி விழுந்த பிறகு, தனது செயற்பாட்டால் எத்தகைய விளைவுகளையும் ஏற்படுத்த இயலாத அற்பமான எந்த மனித உயிருமே இல்லை என்று அது அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்குமா? இழப்பு ஏற்பட்டவர்களுக்கு அது ஆறுதல் கூறுமா? பலவீனமானவர்களுக்கு பலம் தருமா? பாவச் செயலைப் புரிந்தோருக்கு மன்னிப்பு தருமா? கடுஞ்சுமையால் களைத்துப் போனவர்களுக்கு ஓய்வு தருமா?''
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 408)
-0-

17.இறையியலிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டியது அவசியமாகும் – III

முதல் ஆட்சேபனையானது, மதம் என்பது மனிதனுக்கும் கடவுளுக்குமிடையிலான – முற்றிலும் தனிப்பட்ட பிரச்சினை என்ற எண்ணத்திலிருந்து தொடங்குகிறது. அது, இயற்கைக் கும் அப்பாற்பட்டது. சமூகத்துடன் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வாதம், அய்யத்திற்கிடமின்றி அறிவுப்பூர்வமானதாகும். ஆனால், அதனுடைய அடித்தளங்கள் முற்றிலும் தவறானவை. எவ்வாறாயினும் அது மதத்தைக் குறித்த ஒருதலைப் பட்சமான பார்வையாகும் என்பதுடன், அது முற்றிலும் மதத்தின் வரலாற்று ரீதியான அம்சங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது; மதத்தின் அடிப்படையான அம்சங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவு.
ambedkar_291மதத்தின் செயல்பாட்டையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இறையியலிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டியது அவசியமாகும். மதத்தின் முதன்மையான அம்சங்கள் எனப்படுபவை அதன் வழிமுறைகள், நடைமுறைகள், கடைப்பிடிக்கப்படும் ஆசாரங்கள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவையாகும். இறையியல் என்பது, இரண்டாம்பட்சமானது. அதனுடைய இலக்கு என்பது அவற்றை மதத்தோடு இணைத்தல் என்பதாகும்...
மதம் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று நினைக்காதிருப்பதும் அதே போன்று அவசியமாகிறது. மதத்தின் முக்கிய உள்ளடக்கம் சமூக ரீதியானது என்ற அம்சத்தைக் காணத் தவறுவது, மதத்தை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. பழங்காலச் சமூகமானது – வாழ்க்கையையும், அதைக் காப்பதையும் குறித்தே அக்கறை கொண்டிருந்தது. இத்தகைய வாழ்க்கை வளர்ச்சிப் போக்குகள்தாம் பழங்காலச் சமூகத்தில் மதத்தினுடைய உள்ளடக்கமாகவும், ஆதாரமாகவும் இருந்தன. வாழ்க்கையையும், அதைக் காப்பதற்குமான அக்கறையும் பழங்காலச் சமூகத்திற்கு மிக அதிகமாக இருந்தது. அந்தச் சமூகமானது, அவற்றை, அதனுடைய மதத்திற்கான அடித்தளமாகவே கொண்டிருந்தது. பழங்காலச் சமூகத்தினரின் மதத்தில் வாழ்க்கை வளர்ச்சிப் போக்குகள் முதன்மையானதாக இருந்தன. அவர்களைப் பாதித்த ஒவ்வொன்றும் அதனுடைய மதத்தின் பகுதியாக மாறியது. பழங்காலச் சமூகத்தில் வினைமுறைச் சடங்குகள் என்பவை பிறப்பு, முழு வளர்ச்சிப் பருவம் எய்துதல், பூப்பெய்துதல், திருமணம், நோய், மரணம் மற்றும் போர் போன்றவற்றுடன் மட்டுமே தொடர்பு கொண்டிருக்கவில்லை; அது உணவுடனும் தொடர்பு கொண்டிருந்தது.
மேய்ச்சல் நில மக்களிடையே ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும் புனிதமானவையாக இருந்தன. விவசாய மக்களிடையே விதைப்பு நேரமும், அறுவடையும் சடங்குகளோடு நடத்தப்பட்டன. இந்தச் சடங்குகள் பயிர்களின் வளர்ச்சி மற்றும் அவற்றைப் பாதுகாப்பது குறித்ததோடு தொடர்பு கொண்டிருந்தன. அதேபோன்று வறட்சி, பூச்சிகளினால் ஏற்படும் நாசம் மற்றும் பிற விந்தையான, வழக்கத்திற்கு மாறான இயற்கை தோற்றப் போக்குகள் ஏற்படும் நேரத்திலும் இத்தகைய சடங்குகள் நடத்தப்பட்டன. பேராசிரியர் கிரவுலி குறிப்பிட்டதைப் போல, பழங்கால மக்களின் மதம் என்பது தொடக்கத்திலும், முடிவிலும் வாழ்க்கையில் புனிதப்படுத்துவது என்பதில் உறுதியாகயிருந்தது.
ஆகையால், வாழ்க்கை என்பதிலும் – வாழ்க்கையைப் பாதுகாப்பது என்பதிலும்தான் பழங்கால மக்களின் மதம் என்பது அடங்கியிருந்தது. பழங்கால மக்களின் மதத்தைப் பற்றிய வாதம் என்னவோ, அதுவே அனைத்து மதங்களுக்கும், அவை எங்கெங்கு இருந்தாலும் பொருந்தும். காரணம் என்னவென்றால், வாழ்க்கையும் அதைப் பாதுகாப்பதும்தான் மதத்தின் சாரமாக இருந்தது. தற்கால சமூகத்தில் இறையியல் பண்படுத்தப்பட்டதன் காரணமாக, மதத்தின் சாரம் என்பது பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளதோடு சொல்லப் போனால் மறக்கப்பட்டும் விட்டது. ஆனால், வாழ்க்கை என்பதும் அதைப் பாதுகாப்பது என்பதும் இன்றைய சமூகத்திலும்கூட, மதத்தின் சாரமாக விளங்குகிறது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை...
மதத்தின் தோற்றுவாய் மற்றும் வரலாறு குறித்து ஆராயும் மாணவர்கள், பழங்காலச் சமூகம் குறித்த தங்கள் ஆய்வைத் தொடங்கும்பொழுது – அம்மக்களும் மந்திர தந்திரங்கள், குலமரபுச் சின்னங்கள், அவற்றோடு சேர்த்து பழங்காலச் சமூகத்தில் காணப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் போன்றவற்றில் மூழ்கிவிடுகின்றனர். அவர்கள், பழங்காலச் சமூக வளர்ச்சிப் போக்கை மதத்தின் முதன்மையான உள்ளடக்கமாகக் காணத் தவறுகிறார்கள் என்பது மட்டுமல்ல; மந்திரம் தந்திரம் மற்றும் பிற சடங்கு நிகழ்ச்சிப் போக்குகள் போன்றவற்றின் செயல்களை உணர்ந்து கொள்ள வும் தவறிவிடுகின்றனர். இது, மிகப்பெரும் தவறாகும் என்பதுடன் மதத்தில் அக்கறை கொண்டுள்ளவர்களை மிகவும் பாதிக்கும். ஏனென்றால், பெரும்பாலான மக்களிடையே இன்று மதத்தைக் குறித்த தவறான கருத்து ஆழமாகியிருப்பதற்கு இது காரணமாகிறது.
– தொடரும்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 406
-0-

18.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சவால்விடும் துணிச்சல் இந்துக்களுக்கு இல்லை – II

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு மதவழிப்பட்ட சமூகமும் தனக்கே உரிய அரசியல் பாதுகாப்புகளைப் பெற உரிமை பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் தற்போதுள்ள நிலையில் – முஸ்லிம்களும், கிறித்துவர்களும் அனுபவிக்கும் அரசியல் உரிமைகளுக்கு இணையாக அனுபவித்து வருகின்றனர். தங்களுடைய மத நம்பிக்கைகளை அவர்கள் மாற்றிக் கொண்டால், அந்த மாற்றமானது இதுவரை இல்லாத எந்தவொரு அரசியல் உரிமைகளையும் அவர்களுக்கு பெற்றுத்தரப் போவதில்லை. அவர்கள் மதம் மாறவில்லை என்றால், ஏற்கனவே பெற்றிருக்கும் அரசியல் உரிமைகளை அவர்கள் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆதலால், அரசியல் ஆதாயத்திற்கும் மதமாற்றத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டானது, உண்மையைப் புரிந்து கொள்ளாமல் வீசப்பட்ட மோசமான குற்றச்சாட்டாகும்.
இரண்டாவது ஆட்சேபனையானது, அனைத்து மதங்களும் ஒரே விஷயத்தையே கற்பிக்கின்றன என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கோட்பாட்டிலிருந்து ஒரு முடிவுக்கு வரப்படுகிறது : அதாவது அனைத்து மதங்களும் ஒரே விஷயத்தை கற்பிப்பதால், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குச் செல்ல விரும்புவதற்கு எவ்விதக் காரணமும் இல்லை என்று வாதிடப்படுகிறது. வாழ்வின் பொருள் என்பது, "நல்லதை'க் கடைப்பிடிப்பதில்தான் அடங்கி யுள்ளது என்று அனைத்து மதங்களும் கருதுவதை ஏற்றுக் கொள்ளலாம். இந்த அம்சம் வரை, இந்தக் கோட்பாட்டுக்கு நம்பகத் தன்மையுண்டு என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், இந்தக் கோட்பாடு இதற்கு அப்பாலும் சென்று, இதனால்தான் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குச் செல்ல விரும்புவதற்குக் தேவை இல்லை என்று அழுத்தமாகக் கூறும் பொழுது, அது தவறான கோட்பாடாகி விடுகிறது.
வாழ்வின் பொருள் என்பது, நல்லதைக் கடைப் பிடிப்பதுதான் என்று கற்பிக்கும்பொழுது, அனைத்து மதங்களும் ஒன்று போலவே தோன்றும். ஆனால், "நல்லது என்பது எது?' என்ற கேள்விக்கு விடையளிக்கும்பொழுதுதான் – மதங்கள் ஒரே மாதிரியான பதிலை அளிப்பதில்லை. இதில் அவை நிச்சயமாக மாறுபடுகின்றன. சகோதரத்துவம் நல்லது என்று ஒரு மதம் கருதுகிறது; மற்றொரு மதமோ சாதியும் தீண்டாமையும் நல்லவை என்று கூறுகிறது.
இத்தகைய ஊசலாட்டங்கள் தவிர, நல்லது என்று தாம் நினைப்பவற்றை மேலும் வளரச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மதங்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. வன்முறையை வலியுறுத்தக்கூடிய மதங்கள் இல்லையா? அகிம்சையை வலியுறுத்தக்கூடிய மதங்கள் இல்லையா? இந்த அம்சங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது, அனைத்து மதங்களும் ஒரே மாதிரியானவை என்றும், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குப் போக விரும்புவதற்கு எவ்விதக் காரணமும் இல்லையென்றும் எப்படி கூற முடியும்?
இரண்டாவது ஆட்சேபனையைக் கிளப்புவதன் மூலம் ஓர் இந்து, இந்து மதக் கோட்பாடுகளின் தகுதிகள் எவ்வாறானவை என்று பரிசீலிப்பதை தவிர்க்கவே முயற்சி செய்கிறார். மதம் மாறுவது தொடர்புடைய கருத்து மோதலில், இந்து கோட்பாடுகளில் என்ன தவறு இருக்கிறது என்று கூறும்படி கேட்டு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு சவால் விடுவதற்கு எந்த இந்துவிற்கும் துணிச்சல் இல்லை.
இந்து எனப்படுபவர் மதங்களை ஒப்புநோக்கிப் பார்க்கும் அறிவியல் அறிவின் கீழ் தஞ்சம் புகவே செய்கிறார். மதங்களை ஒப்புநோக்கிப் பார்க்கும் அறிவியல் என்பது, திருத்தூதுவர்களால் வெளிப்படுத்தப்பட்ட மதங்கள் என்பனவற்றின் அகந்தையான கூற்றுகளை உடைத்தெறிந்துவிட்டது; திருத்தூதுவர்களால் வெளிப்படுத்தப்பட்ட தங்கள் மதங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், அவ்வாறு திருத்தூதுவர்களால் வெளிப்படுத்தப்படாத பிற மதங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவை உரிமை கொண்டாடுவதை அது தகர்ந்தெறிந்துவிட்டது.
ஓர் உண்மையான மதத்தைப் போலியான மதத்திலிருந்து பிரித்துப் பார்க்கத் திருத்தூதுவர்களால் வெளிப்படுத்தப்பட்ட மதத்தைக் கொண்டு தான் தீர்மானிக்க வேண்டுமென்பது – மிகவும் ஒருதலைப்பட்சமானது; மிகவும் தான்தோன்றித்தனமானது என்பதைக் கூறியதன் மூலம் மதங்களை ஒப்புநோக்கிப் பார்க்கும் அறிவியல், மதத்தின் லட்சியத்திற்கு ஒருமகத்தான சேவை புரிந்துள்ளது என்பதில் அய்யமில்லை. ஆனால், அந்த அறிவிய லானது அனைத்து மதங்களும் நல்லவைதான் என்றும், அவற்றை ஒன்றுக்கெதிராக மற்றொன்றை வேறுபடுத்திக் காண்பதில் பயன் இல்லை என்றும் கூறுவதன் மூலம் – தனது நற்பெயருக்கு அது இழுக்கு தேடிக் கொண்டுவிட்டது.
முதலாவது சொல்லப்பட்ட ஆட்சேபனை மட்டுமே மிகுந்த கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய தகுதியைப் பெறுகின்ற ஒரே ஆட்சேபனையாகும்.
– தொடரும்
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 405)
-0-

19.அரசியல் ஆதாயத்திற்காக மதம் மாறுகிறார்களா?

தங்களுடைய பிரச்சினை குறித்து சிந்திக்கும் திறன் பெற்ற தாழ்த்தப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையோர், தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால் இந்து மதத்தைக் கைவிட்டு வேறு ஏதாவது ஒரு மதத்திற்கு மாற வேண்டும் என்று நம்புகிறார்கள். 1936 ஆம் ஆண்டு மே 31 அன்று, பம்பாய் நகரில் நடைபெற்ற மகர்களின் மாநாட்டில் இது குறித்து ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாடு மகர்களின் மாநாடு என்ற போதிலும்கூட, இந்தத் தீர்மானமானது இந்தியா முழுமையிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் மிகப்பெரும் பகுதியினருடைய ஆதரவைப் பெற்றதாகும். வேறெந்த தீர்மானமும் இத்தகையதொரு உத்வேகத்தை உருவாக்கியதில்லை. இந்து சமூகம் அதன் அடித்தளம் வரை உலுக்கப்பட்டது; இந்த முயற்சியினை மேற்கொண்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிராக சாபங்கள், நிந்தனைகள், அச்சுறுத்தல்கள் அள்ளி வீசப்பட்டன.
ambedkar_276தாழ்த்தப்பட்டவர்கள் மதமாற்றம் செய்வதை எதிர்ப்பவர்கள் நான்கு முதன்மையான ஆட்சேபனைகளை எழுப்புகிறார்கள் : 1. மதமாற்றம் செய்வதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கப் போகிறது? மதமாற்றமானது, தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை 2. அனைத்து மதங்களும் உண்மையானவை, அனைத்து மதங்களும் நல்லவை. மதத்தை மாற்றுவது என்பது பயனற்றது 3. தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறுவது என்பது அதன் இயல்பில் அரசியல் தன்மை வாய்ந்ததாகும் 4. தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறுவது உண்மையானதல்ல; ஏனென்றால் அது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆட்சேபனைகள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமானவை, வீணானவை, பயனற்றவை என்பதை நிலைநாட்டுவதற்கு நீண்ட விவாதம் ஏதும் தேவையில்லை.
கடைசியாகச் சொல்லப்பட்ட ஆட்சேபனையை முதலில் எடுத்துக் கொள்வோம். எவ்வித மத உள்நோக்கமும் இல்லாமலேயே மதமாற்றம் நடைபெற்றுள்ள சம்பவங்கள் வரலாற்றில் ஏராளமாகப் பொதிந்துள்ளன. கிளோவிசும் அவருடைய குடிமக்களும் கிறித்துவத்திற்கு மதம் மாறினார்களே, அதன் தன்மை என்ன? ஏதெல்லாம் பெர்டும் அவருடைய கெண்ட் குடிமக்களும் எவ்வாறு கிறித்துவர்களானார்கள்? புதிய சமயத்தை அவர்கள் ஏற்கும்படிச் செய்ததில் ஏதாவது மத உள்நோக்கம் இருந்ததா?...
நிர்பந்தம் அல்லது ஏமாற்றுதல் மூலம் மதமாற்றம் நடைபெற்றுள்ளதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. மதம் என்பது இன்று மூதாதையர் சொத்தின் ஒரு பகுதியாகி விட்டது. வாரிசுரிமை போல அது தந்தையிடமிருந்து மகனுக்கு வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய மதமாற்றங்களில் என்ன உண்மைத் தன்மை இருக்க முடியும்? தாழ்த்தப்பட்டவர்களின் மதமாற்றம் நடைபெறுவதானால், அவர்கள் இணையவிருக்கும் மதத்தின் தன்மை, இதர பல்வேறு மதங்களின் நல்ல அம்சங்கள் முதலானவை அனைத்தும் முழுமையாக ஆராய்ந்த பின்னரே நடைபெறும். அத்தகைய மதமாற்றம், உண்மையான மதமாற்றமில்லை என்று எவ்வாறு கூற முடியும்? மறுபுறத்தில், அது, வரலாற்றில் முதலாவது உண்மையான மதமாற்றமாகவும் இருக்கும். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்களுடைய மதமாற்றத்தின் உண்மைத் தன்மையை எவரும் ஏன் சந்தேகிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது.
மூன்றாவது ஆட்சேபனையானது, ஆழ்ந்து ஆராயாமல் தெரிவிக்கப்படும் ஆட்சேபனையாகும். மதமாற்றம் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் அதிகரிக்கப் போகிறது என்பதை யாரும் விளக்கவில்லை. ஏதாவது அரசியல் ஆதாயம் இருக்குமானால், அது மதமாற்றத்திற்கான நேரடித் தூண்டுதல் என்று யாரும் நிரூபிக்கவில்லை. மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அதாவது, மதமாற்றத்திற்கான நேரடித் தூண்டல் மூலம் கிடைக்கும் ஆதாயத்திற்கும், மதம் மாறுவதால் தற்செயலாகக் கிட்டும் பலனுக்குமுள்ள வேறுபாட்டை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. இவ்விரண்டுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. மதம் மாறுவது என்பது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓர் அரசியல் ஆதாயம் கிடைப்பதில் போய் முடியலாம். ஆனால், இம்மாதிரியான ஆதாயம் மதம் மாறுவதற்கான நேரடித் தூண்டுதலாக அமையும்போதுதான் அது ஒழுங்கீனமானது, நெறியற்றது எனக் கண்டிக்கப்பட முடியும்.
ஆகையால், தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறவிரும்புவது அரசியல் ஆதாயத்திற்குதான்; வேறு எதற்காகவும் அல்ல என்று அதை எதிர்ப்பவர்கள் நிரூபித்தாலொழிய அவர்களுடைய குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகும். அரசியல் ஆதாயம் கிட்டுவது தற்செயலான நிகழ்ச்சி என்றாகும்போது, மதம் மாறுவதில் எந்த ஒழுக்கக் கேடும் இல்லை. எனினும் உண்மை என்னவென்றால், மதமாற்றம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித புதிய அரசியல் ஆதாயத்தையும் அளிக்க முடியாது என்பதேயாகும்.
– தொடரும்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 403
-0-

20.ஆணுக்கு இணையாகப் பெண்ணை உயர்த்துவதுதான் புத்தரின் நோக்கம் – X

ஆண்களுக்கு மநு வரையறுத்துக் கூறுகிற லட்சியத்தின் சாராம்சம் இதுதான் : புனிதமான மந்திர உச்சாடனத்தோடு அவளைத் திருமணம் செய்து கொண்ட கணவன் எப்போதும் – இந்த உலகிலும், மறுஉலகத்திலும் அவனுடைய மனைவிக்கு மகிழ்ச்சியின் மூலாதாரமாக இருக்கிறான். அவள் எப்போதும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டும். தனது வீட்டு விவகாரங்களை நிர்வகிப்பதில் சாமர்த்தியமாக இருக்க வேண்டும். தனது பாத்திரங்களை சுத்தம் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். செலவு செய்வதில் சிக்கனமாக இருக்க வேண்டும். இதை ஒரு பெண்ணுக்கு மிகவும் உன்னதமான லட்சியம் என்று இந்துக்கள் கருதுகின்றனர்.
பெண்களின் இயலாமைகள் என்ற அவருடைய நினைவுச் சின்னத்தின் மீது ஓர் அடையாளக் கல்லை வைப்பது போன்று மநு, ஒரு பெண்ணைக் கொல்வதை சாதாரண குற்றம் என்கிறார். மேலும், மது (அருந்துதல்), பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் அல்லது சத்திரியர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது ஆகிய அனைத்தும் சிறிய குற்றங்களேயாகும். ஒரு சூத்திரன், வைசியன் அல்லது ஒரு சத்திரியனைக் கொல்வது ஒரு சாதாரண குற்றமே என்று ஏன் மநு கூறினார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு பார்ப்பனர் இவர்கள் அனைவருக்கும் மேலானவன் என்றும், ஒரு பார்ப்பனரை கொல்வதுதான் மிகப்பெரிய குற்றம் என்றும் நிலைநிறுத்துவதற்கு அவர் முயன்று கொண்டிருந்தார். ஆனால், அதே விதியைப் பெண்களுக்கு அவர் ஏன் பயன்படுத்தவில்லை? ஏனெனில், மநுவின் பார்வையில் ஒரு பெண் எந்த மதிப்பும் இல்லாத ஒரு பொருள் என்பதே இதற்குக் காரணமாகும்.
பெண்களைப் பற்றிய மநுவின் சட்டங்களில் புதியவையோ, அதிர்ச்சியளிக்கத் தக்கவையோ ஒன்றுமில்லை. இந்தியாவில் பார்ப்பனியம்
தோன்றியது முதல் பார்ப்பனர்களின் கருத்துகள் இவையேயாகும். மநுவுக்கு முன்னால் அவை சமூகத்தத்துவம் என்ற அளவில் மட்டுமே இருந்தன. ஒரு சமூகத் தத்துவமாக இருந்ததை, அரசின் சட்டமாக மாற்றியதுதான் மநு செய்த வேலையாகும். பெண்களின் மீது இந்த இயலாமைகளை மநு சுமத்துவதற்கு இட்டுச் சென்ற காரணத்தை அவர்கள் அறியாதது, இரண்டாவது விஷயமாகும். புத்தரின் சமயத்தில் வந்து சேர்ந்து அதன் மூலம் பார்ப்பனிய மதத்தின் அடிக்கட்டு மானத்தையே தகர்ப்பதற்கு பெரும் கும்பலாக வந்த ஆரிய சமூகத்தின் இரு முக்கியப் பகுதியினர் சூத்திரர்களும் பெண்களுமாவர். புத்த சமயத்தின் திøசயில் பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்த பெண்களின் நுழைவைத் தடுத்து நிறுத்துவதற்கு மநு விரும்பினார்.
இதற்காகத்தான் மநு இந்த இயலாமைகளைப் பெண்களின் மீது சுமத்தி, அவர்களை நிரந்தரமாக முடமாக்கினார். இதை சந்தேகிப்பவர்கள் மநுஸ்மிருதியில் அடங்கியுள்ள கீழ்வரும் ஆணைகளை கவனித்துப் பார்க்கட்டும் : ஒரு நபர் இறந்தபோது செய்யப்படும் ஈமச் சடங்குகளும் இறுதிக் காரியங்களும் – அவர் சாதி மறுப்புத் திருமணத்தின் மூலம் பிறந்தவராக இருந்தாலோ, துறவு வாழ்க்கையில் ஈடுபட்டவராக இருந்தாலோ, தற்கொலை புரிந்து தமது வாழ்க்கையை முடித்துக் கொண்டவராக இருந்தாலோ – அந்த ஈமக் கடன்கள் திரும்பப் பெறப்படும்.
இந்த ஆணை, மற்றவர்களோடு அதாவது, (1) துறவு மனப்பான்மை உடையவர்கள் (2) மதப் பற்றில்லாத குழுவினரோடு சேர்ந்த பெண்களுக்கு எதிராக குறிவைத்துள்ளதாகும். இந்த ஆணையில் துறவு மனப்பான்மையானது, பரிவர்ஜகர்களைக் குறிப்பிடுகிறது. அதாவது, தமது இல்லங்களை விட்டு வெளியேறி துறவறத்தை மேற்கொண்டவர்கள் மற்றும் மதப் பற்றில்லாத குழுவினர் என்று குறிப்பிட்டதற்குக் காரணம், புத்த சமயம் தான் மநுவின் மனதிலிருந்தது என்பதில் சிறிதும் அய்யமில்லை. எனவே ஒரு துறவிக்கு அல்லது மதப்பற்றில்லாத குழுவில் சேர்ந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு ஈமச் சடங்குகள் நடத்தப்படக் கூடாதென்று மநு அறிவிக்கும்போது, புத்தரின் சமயத்தில் சேர்ந்து கொண்ட ஒரு குடும்பத்தின் நபருக்கு – ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் – ஈமச் சடங்குகள் செய்வதை மநு தடை செய்துள்ளார். வேறு சொற்களில் கூறுவதெனில், அவர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டவர்கள், இனி ஒருபோதும் குடும்பத்துடன் சேர்ந்தவர்களல்லர் என்றே கருதப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
ஒரு சில பக்கங்களின் எல்லைக்குள், இந்து பெண்ணின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு நான் முயன்றுள்ளேன். அவர்களின் வீழ்ச்சிக்கு யார் காரணம், அவர் ஏன் அதை ஏற்படுத்தினார் என்பது தொடர்பான விளக்கத்தைத் தருவதற்கும் நான் முயன்றுள்ளேன். தப்பெண்ணம் இல்லாத மற்றும் பாரபட்சமில்லாத ஒவ்வொருவரும் பெண்ணின் இடையறாத துயரங்களுக்கு பொறுப்பானவர் புத்தர் அல்லர் என்பதை உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால், உண்மையில் பெண்ணை உயர்த்துவதற்கு புத்தர் முயன்றார் என்றால், அது அவளை ஆணுக்கு இணையாக உயர்த்துவதற்குதான்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 126
-0-

21.பெண்கள் மீது மநு விதித்திருக்கும் கொடூரத் தடைகளை முழுவதுமாக அறிந்து கொள்க – IX


குழந்தைப் பருவத்தில் பெண்ணின் தந்தை (அவளை) பாதுகாக்கிறார்; இளமையில் அவளுடைய கணவன் பாதுகாக்கிறார்; முதிய வயதில் அவளுடைய மகன்கள் பாதுகாக்கிறார்கள். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருப்பவளல்ல. தீய மன இசைவுகளுக்கு எதிராக – அவை எவ்வளவு அற்பமாகத் தோன்றியபோதிலும் – பெண்கள் கண்காணிக்கப்பட வேண்டும்; அவற்றுக்கெதிராகத் தற்காப்பு செய்து கொள்ளப்படவில்லையெனில், அவை இரண்டு குடும்பங்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தும்.
எல்லா சாதிகளின் உயர் கடமையை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது, பலவீனமான கணவர்களும்கூட தமது மனைவிகளைப் பாதுகாப்பதற்கு முயல வேண்டும். ஒரு சிறுபெண்ணோ, ஓர் இளம் பெண்ணோ அல்லது வயதான பெண்ணும்கூட – தனது சொந்த வீட்டிலும்கூட – எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. (IX3,5) (V147, 148)
அவள் தனது தந்தை, கணவன் அல்லது மகன்களிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முயலக்கூடாது; அவர்களை விட்டுப் பிரிந்து செல்வதன் மூலம் அவள் இரு (தனது சொந்த மற்றும் தனது கணவனின்) குடும்பங்களையும் இகழ்ச்சிக்குள்ளாக்குவாள். (ங149) பெண்ணுக்கு விவாகரத்து செய்து கொள்வதற்கு உரிமை இருக்கக்கூடாது. கணவன், மனைவியுடன் ஒன்றிணைவதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள், ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளப்பட்டுவிட்டால், அதற்குப் பிறகு பிரிந்து செல்ல முடியாது என்பதே (IX45).
பல இந்துக்கள், மநுவின் விவாகரத்து தொடர்பான முழுக்கதையுமே இவ்வளவுதான் என்று இத்துடன் நின்று விடுகிறார்கள். திருமணத்தை ஒரு புனித சடங்காக மநு கருதினார். அதனால் விவாகரத்தை அனுமதிக்கவில்லை என்ற சிந்தனை யுடன் தமது மனசாட்சியைத் திருப்திப்படுத்திக் கொள்வதோடு இதைத் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். இது, உண்மைக்குப் புறம்பானது என்பதை கூறத் தேவையில்லை. விவாகரத்துக்கு எதிரான அவருடைய சட்டம் மிகவும் வேறுபட்ட உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது. இது, ஓர் ஆணை ஒரு பெண்ணுடன் பிணைத்து விடுவதற் கல்ல. ஆனால் இது, பெண்ணை ஓர் ஆணுடன் பிணைத்து வைப்பதற்கும், ஆணை சுதந்திரமாக விடுவிப்பதற்குமாகும்.
ஏனெனில், மநு ஓர் ஆணை தனது மனைவியைக் கைவிடுவதைத் தடுப்பதில்லை. உண்மையில் தனது மனைவியைக் கைவிடுவதற்கு அவர் அவனை அனுமதிப்பதோடு மட்டுமன்றி, அவன் அவளை விற்பதற்கும் அனுமதிக்கிறார். ஆனால், அவன் செய்வது என்னவெனில், மனைவி சுதந்திரமடைவதைத் தடுக்கிறார். இது குறித்து மநு கூறுவதைப் பாருங்கள் : விற்பனையோ அல்லது நிராகரிக்கப்படுவதன் மூலமாகவோ ஒரு மனைவி தனது கணவனிடமிருந்து விடுதலையாவதில்லை (IX46).
இதன் பொருள், தனது கணவனால் விற்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட ஒரு மனைவி, அவளை விலைக்கு வாங்கிய அல்லது நிராகரிக்கப்பட்ட பின் அவளைத் தன் வசப்படுத்திக் கொண்ட மற்றொருவருக்கு – ஒருபோதும் சட்டப்பூர்வமான மனைவியாக முடியாது என்பதேயாகும். இது அட்டூழியமானதல்ல என்றால், வேறு எதுவும் அட்டூழியமானதாக இருக்க முடியாது. ஆனால், தனது சட்டத்தை உருவாக்கும்போது, நீதி அல்லது அநீதி என்ற கருத்தோட்டங்களைப் பற்றி மநு கவலைப்படவில்லை. பவுத்த ஆட்சியின் கீழ் பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தைப் பறிப்பதற்கு அவர் விரும்பினார். சுதந்திரத்தைக் கண்டு மநு ஆத்திரமடைந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே அவளுடைய சுதந்திரத்தைப் பறித்தார்.
சொத்து தொடர்பான விஷயத்திலும் மனைவியை ஓர் அடிமையின் நிலைக்கு மநு தாழ்த்திவிட்டார். ஒரு மனைவி, ஒரு மகன், ஓர் அடிமை – இம்மூவருக்கும் சொத்தில்லை என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பாதிக்கும் செல்வம், அது யாருக்கு சொந்தமானதோ அவருக்காகப் பெறப்படுகிறது (IX416). ஒரு மனைவி விதவையாகும்போது, அவளுக்கு பராமரிப்புச் செலவையும் வாழ்வாதாரத்தையும் மநு அனுமதிக்கிறார். அவள் அவளுடைய குடும்பத்திலிருந்து தனித்திருந்தாளேயானால், அவளுடைய கணவனின் சொத்தில் அது விதவையின் பாதுகாப்புக்குரிய சொத்தாகிறது. ஆனால், சொத்தின் மீது அவளுக்கு எந்த ஆதிக்கத்தையும் மநு ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
மநுவின் சட்டங்களின் கீழ் ஒரு பெண், கொடிய உடலுக்கு ஊறுவிளைவிக்கும் தண்டனைக்குரியவளாகிறாள். தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதற்கு அவளுடைய கணவனை மநு அனுமதிக்கிறார். தவறுகள் செய்த ஒரு மனைவி, ஒரு மகன், ஓர் அடிமை, ஒரு மாணவர், ரத்த சம்பந்தமுடைய ஒரு இளைய சகோதரர் ஆகியோர் ஒரு கயிற்றினாலோ அல்லது ஒரு மூங்கில் கழியினாலோ அடிக்கப்படலாம். மநுவின் விதிப்படி அறிவு பெறுவதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை இல்லை. வேதம் படிப்பதற்கு அவளுக்கு உரிமை இல்லை. இதையெல்லாம் மநு தடை செய்திருக்கிறார்.
எந்த ஒரு பெண்ணுக்கும் சமஸ்காரங்களை நிறைவேற்றுவது அவசியமாகும், ஆனால் அவள் வேத மந்திரங்களைக் கூறாமல் அவற்றை நிறைவேற்ற வேண்டும். பலியிடுவது மதத்தின் உள்ளார்ந்த ஆத்மாவாகும் என்று பார்ப்பனியம் கூறுகிறது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு – 17(2), பக்கம் – 124)
-0-

22.இந்துக்களுக்கு சட்டம் வழங்கிய மநுதான் பெண்களின் வீழ்ச்சிக்கு காரணம் – VIII

 ஒரு காலத்தில் ஒரு பெண் உபநயனம் செய்து கொள்வதற்கு தகுதியுடையவளாயிருந்தாள் என்பது, அதர்வ வேதத்திலிருந்து தெளிவாகிறது. அதில், ஒரு பெண், தனது பிரம்மச்சரியத்தை முடித்த பின்னர் திருமணத்திற்கு தகுதியுடையவராகிறார் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வேத மந்திரங்களை திருப்பிக் கூற முடியும் என்பதும், வேதங்களைப் படிப்பதற்கும் பெண்கள் கற்றுக் கொடுக்கப்பட்டார்கள் என்பதும் ஷ்ரவுத்த சூத்திரங்களிலிருந்து தெளிவாகிறது. பெண்கள் குருகுலத்தில் (கல்லூரியில்) பயின்றார்கள், வேதங்களின் பல்வேறு ஹாகாக்களை (பிரிவு களை) கற்றார்கள், மற்றும் மீமாம்சாவில் நிபுணர்களாயினர் என்ற உண்மைக்கு பாணினியின் அஷ்டாத்யாய் சான்று கூறுகிறது. பெண்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள், மாணவிகளுக்கு வேதங்களை கற்றுக் கொடுத்தார்கள் என்று பதஞ்சலியின் மகாபாஷ்யம் காட்டுகிறது.
மதம், தத்துவம், உண்மை பற்றி ஆயும் கோட்பாட்டுத்துறை முதலிய மிகவும் மறைபொருளான விஷயங்கள் பற்றியும்கூட, ஆண்களுடன் பெண்கள் பொது விவாதங்களில் ஈடுபடுவது பற்றிய பல நிகழ்வுகள் உள்ளன. ஜனகருக்கும் சுலபாவுக்கும் இடையிலும், யக்ஞவல்கியருக்கும் கார்கிக்கும் இடையிலும், யக்ஞவல்கியருக்கும் மைத்ரேயிக்கும் இடையிலும், சங்கராச்சாரிக்கும் வித்யாதாரிக்கும் இடையிலுமான பகிரங்க விவாதங்கள் மநுவுக்கு முந்திய காலத்தில் – இந்தியப் பெண்கள் கற்பதிலும் கல்வியிலும் மிக உயர்ந்த சிகரத்திற்கு எட்ட முடியும் என்பதைக் காட்டுகிறது.
ambedkar_240ஒரு காலத்தில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டு வந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. பண்டைக் கால இந்தியாவில் மன்னரின் முடிசூட்டுவிழாவில் மிகவும் முக்கியப் பங்காற்றிய அரசிகளில் அரசியாவார். இந்த சமயத்தில் மன்னர் மற்றவர்களுக்கு செய்தது போலவே அரசிக்கும் ஒரு பரிசு அளிக்கிறார். மன்னராக நியமிக்கப்பட்டவர் அரசிக்கு பெரும் மரியாதை செலுத்தியதோடு, கீழ் சாதிகளைச் சேர்ந்த தனது பிற மனைவிகளுக்கும் வணக்கம் தெரிவித்தார். இதே முறையில், முடிசூட்டு விழா முடிந்த பின்னர், மன்னர், கில்டுகளின் (பொது அமைப்புகளின்) பெண் தலைவிகளுக்கும் வணக்கம் தெரிவிக்கிறார்.
இது உலகின் எந்தப் பகுதியிலும் பெண்களுக்கான ஒரு மிகவும் உயர்வான நிலையாகும். அவர்களின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? இந்துக்களுக்கு சட்டம் வழங்கியவரான மநுதான் இதற்குக் காரணம். இதற்கு வேறு எந்தப் பதிலும் இருக்க முடியாது. அய்யப்பாட்டுக்கு எத்தகைய இடமும் அளிக்காத வகையில், பெண்கள் தொடர்பாக மநு இயற்றிய, மற்றும் மநுஸ்மிருதியில் காணப்படுகிற சில விதிகளை (சட்டங்களை) நான் மேற்கோள் காட்டுகிறேன்.
“இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்லத் தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்தக் காரணத்திற்காகவே, விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்போது ஒருபோதும் எச்சரிக்கையின்றி இருக்க மாட்டார்கள்.'' II 213
“ஏனெனில், இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி, ஒரு கல்விமானையும் பாதை தவறி செல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உள்ளவர்கள்.'' II 214
“ஒருவர் தனது தாயாருடனோ, சகோதரி யுடனோ அல்லது மகளுடனோ ஒரு தனிமையான இடத்தில் உட்கார்ந்திருக்கக் கூடாது; ஏனெனில், உணர்வுகள் சக்தி வாய்ந்தவை. அது ஒரு கல்விமானைக்கூட அடிமைப்படுத்திவிடும்.'' II 215
“பெண்கள் அழகை எதிர்பார்ப்பதில்லை. அது போன்றே வயதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவன் ஓர் ஆணாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அவர்கள், அழகுடைய ஓர் ஆணுக்கு மட்டுமின்றி, அழகற்றவருக்கும் தங்களை விட்டுக் கொடுக்கிறார்கள்.'' IX 14
“ஆண்களின் பாலான தங்களுடைய வெறி ஆர்வத்தின் வாயிலாக, தங்களுடைய மாறத்தக்க மனோநிலையின் வாயிலாக, இயல்பான ஈவிரக்கமற்ற இயல்பின் வாயிலாக அவர்கள் – இந்த உலகில் எவ்வளவு கவனமான பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தாலும் தங்கள் கணவன்மார்களிடம் விசுவாசமற்றவர்களாகி விடுகிறார்கள்.'' IX 15
“உலகத்தைப் படைத்தவர் பெண்களை எவ்வாறு படைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டுள்ள நிலைமையில், ஒவ்வொரு ஆணும், அவர்களைக் காவல் காப்பதற்கு மிகவும் உறுதியாகத் தன்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.'' IX 16
“(அவர்களை உருவாக்கும்போது) கடவுள் பெண்களுக்கு அவர்களின் பதவி, நகைகள் ஆகியவற்றின் மீது அவர்களுக்குப் பிரேமையையும் மற்றும் தூய்மையற்ற விருப்பங்கள், ஆங்காரம், நேர்மையற்ற தன்மை, தீங்கான கெட்ட நடத்தை ஆகியவற்றை உடையவர்களாகவும் படைத்தார்.'' IX 17
மநு, பெண்களைப் பற்றி எவ்வளவு மோசமான எண்ணத்தைக் கொண்டிருந்தார் என்பதை இவை காட்டுகின்றன.
– தொடரும்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 122
-0-

23.திருமணமான, ஆகாத பெண்கள், விதவை, விபச்சாரி என அனைவருக்கும் பாதை திறந்தவர் புத்தர் – VII

இந்தியப் பெண்களுக்கு புத்தர் வழங்கிய சுதந்திரம், மிக மிக மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த உண்மையாகும். இது, பிக்குணிகள் (பெண் துறவிகள்) பிக்கு (ஆண் துறவி) சங்கத்திற்கு கீழ்படிந்து இருக்க வேண்டும் என்று கூறியதில் களங்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுவதைக் கடந்து, மேலோங்கி நிற்கிறது. இது ஒரு பொருளற்ற சுதந்திரம் அல்ல. இச்சுதந்திரத்தை கண்டு அவர்கள் அகமகிழ்ந்தனர். “ஓ, உண்மையிலேயே விடுதலை பெற்றேன், ஓ, நான் புகழார்ந்த சுதந்திரமடைந்துள்ளேன்...'' என்று மூட்டா என்ற ஒரு பார்ப்பனப் பெண் பிக்குணி பாடினார். மெட்டிகா என்ற மற்றொரு பிக்குணி – அவரும் ஒரு பார்ப்பனப் பெண்தான் – “... நான் இங்கு ஒரு பாறையின் மீது உட்காருகிறேன். என்னுடைய ஆன்மாவின் மீது சுதந்திரக் காற்று வீசுகிறது'' என்று பாடினார்.
ambedkar_303திருமதி. ரைஸ் டேவிட்ஸ் பின்வருமாறு கூறுகிறார் :
“தனது நடமாட்ட சுதந்திரத்தைப் பெறுவதற்கு... அவர்கள், தமது பிந்தைய கிறித்துவ அருள் சகோதரிகளைப் போன்றே, அனைத்து சமூக நிலையையும், அனைத்து குடும்ப வெற்றிகளையும் விட்டுக் கொடுத்தனர். அவர்கள் தங்களுடைய உலகை இழந்தனர். ஆனால் அதற்கு மாற்றாக, அவர்கள் ஒட்டுண்ணியாக இருப்பதற்கு பதிலாக, ஒரு தனிநபர் என்ற தகுதியை வென்றனர். ஒட்டுண்ணியாக இருப்பது எவ்வளவு பாராட்டப்பட்டாலும் ஒரு தனிநபர் தகுதி மேம்பட்டதே. மழிக்கப்பட்ட தலை, மேலங்கியால் போர்த்தப்பட்டு, தனியாகப் பிரித்துப் பார்க்கப்பட முடியாத உடை, தளர் வெளியாடை, ஆண் மதகுருவின் துணிகளால் இறுகக் கட்டப்பட்ட ஆடையுடன் கூடிய – சகோதரி சுதந்திரமாக வந்து போகலாம், வனத்தினூடே தனியாகப் பயணம் செய்யலாம் அல்லது மலைமுகட்டில் ஏறலாம்.''
பெண்களை பிக்குணிகளாவதற்கு அனுமதித்ததன் மூலம் புத்தர் அவர்களுக்கு சுதந்திரத்திற்கான பாதையைத் திறந்துவிட்டது மட்டுமின்றி – இன வேறுபாடின்றி அவர்கள்பால் கண்ணியத்தை, உயர்வைப் பெறவும் அனுமதித்தார். பெண் விடுதலை பெற்றதை திருமதி ரைஸ் டேவிட்ஸ் இவ்வாறு கூறுகிறார் : 
“பாலின வேறுபாடுகளின்றி, ஓர் அறிவார்ந்த பிறவியாக, குறைந்தபட்சம் அவளுடைய சகோதரர் அரஹான்ட்ஸினால் அங்கீகரிக்கப்பட்டதால் அவள் மகிழ்ச்சியடைந்தாள். அந்த அளவில் அவள் ஆன்மிகச் சூழலை சுவாசித்தாள். ‘பிடகா'க்களில் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்ட மத மேட்டுக் குடியினருடன் அறிவுத் துறை ஒன்றிணைப்பை அவள் பகிர்ந்து கொண்டாள். அவர்களுடன் அவள், எல்லா வற்றையும் அவை மெய்யாக இருக்கும் வகையிலேயே காணும் சக்தியைப் பெற்றாள். இதை பவுத் தர்கள் விழிப்புடன் இருத்தல் என்றழைக்கின்றனர்.
பெண்ணின் இயல்பு ஆரியர்களாகிய நம்மை எவ்வாறு பாதிக்கிறது? இது குறித்து சோமா என்ற ஒரு பிக்குணி இவ்வாறு கூறுகிறார் :
“ஊடுருவி அறியும் ஆற்றல் நியதியை மெய்யாகவே புரிந்து கொள்வது எதைக் குறிப்பிடுகிறது? ஒருவரிடம் பின்வரும் கேள்வி நிச்சயமாக எழுகிறது : ‘அத்தகைய விஷயங்களில் நான் ஒரு பெண்ணா அல்லது ஓர் ஆணா? அப்படியெனில் நான் எதுவாக இல்லை? அத்தகைய ஒருவரிடம் பேசுவதற்கு மாராதான் பொருத்தமானவர்!''
இத்துடன் முடிந்துவிடவில்லை. பெண்களை பிக்குணிகளாவதற்கு அனுமதித்ததன் மூலம் புத்தர் ஆண்களுடன் சமத்துவத்திற்கான வழியை திறந்து வைத்தார். திருமதி ரைஸ் டேவிட்ஸ் குறிப்பிட்டபடி, “பிக்குணிகள் பிக்குகளுக்கு நிரந்தரமாக மூப்பு அடிப்படையில் இளையவர்களாக நியமிக்கப்பட்டனர் என்பது மெய்யே. அறிவு ரீதியிலும் கூடுதல் மேம்பட்ட தன்மையிலும் ஒரு ‘தேரி', மிக உயர்வான சகோதரத்துவத்துடன் சமத்துவத்தைக் கோரக்கூடும் என்பதும் அதே அளவு தெளிவானதாகும்.
“இறைவணக்கப் பாடல்களில் ஓர் எடுத்துக்காட்டு வருகிறது. ஙீஙீஙீ, ஙஐஐஇல் இதில் பத்தா, மூலவருக்கே வாரிசும் (வழித்தோன்றல்) சமயத்தின் தலைவருமான மகத்தான கஸ்ஸப்பாவின் ஆன்மிக சாதனையுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். இது தொடர்பாக, புத்தர் கன்னித் தன்மைக்கு சிறப்பு ஊக்கம் எதுவும் தரவில்லையென்பது கவனிக்கத்தக்கது. அனைத்துப் பிரிவுப் பெண்களுக்கும் – திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள், விதவைகள், விபச்சாரிகளுக்கும்கூட – தனது பாதையைத் திறந்து வைத்தார். அனைவரும் ஆண்களோடு சட்டத் தகுதி, சுதந்திரம், உயர்வு மற்றும் சமத்துவத்தையும் பெற முடியும்.''
இந்தியாவில் பெண்களின் நிலை – ஒரு காலத்தில் இருந்ததிலிருந்து பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பண்டைக் காலத்தில் ஆட்சி நிர்வாகக் கலையில் அவர்கள் ஆற்றிய பங்கு குறித்து அதிகம் கூற முடியாது. ஆனால், நாட்டின் அறிவுத்துறை மற்றும் சமூக வாழ்க்கையில் அவர்கள் மிகவும் உயர் நிலையை வகிக்கவே செய்தார்கள் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.
– தொடரும்
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(2), பக்கம் – 120)
-0-

24.புத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடியவர் – VI

 பிக்குணிகளை (பெண் துறவி) பிக்குகளின் (ஆண் துறவி) அதிகாரத்தின் கீழ் வைத்ததை – ஒரு சமூகத் தவறு என்று கருதுபவர்கள், பெண்கள் துறவறம் பூணுவதை புத்தர் அனுமதித்தது எந்தளவுக்குப் புரட்சிகரமான நடவடிக்கை என்பதை உணர்வதில்லை. பார்ப்பனியத் தத்துவத்தின் கீழ், பெண்கள் அறிவு பெறும் உரிமை ஏற்கனவே மறுக்கப்பட்டு விட்டது. துறவறம் ஏற்கும் பிரச்சினை வந்தபோது, அவர்கள் இந்தியப் பெண்களுக்கு மற்றொரு அநீதியை இழைத்தனர்.
ambedkar_380வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, வேதங்களைத் தொழும் பார்ப்பனர்களுக்கு துறவறம் ஒரு லட்சியமல்ல; அவர்கள் உபநிடதங்களைப் புனித இலக்கியம் என்று அங்கீகரிப்பதற்கு நீண்ட காலமாக மறுத்து வந்தனர். துறவறம் கொள்வது உபநிடதங்களின் லட்சியமாகும். துறவறத்தின் முடிவு ஆத்ம பிரம்மம் என்ற உபநிடதத் தத்துவத்தை எய்துவதாகும். பார்ப்பனர்கள் துறவற வாழ்க்கையைக் கடுமையாக எதிர்த்தனர். இறுதியாக, அவர்கள் சில நிபந்தனைகளின் பேரில் இறங்கி வந்தனர். அந்த நிபந்தனைகளில் ஒன்று, பெண்களும் (சூத்திரர்களும்) துறவறத்திற்கு தகுதியுள்ளவர்கள் அல்லர் என்பதாகும்.
பெண்கள் துறவறம் மேற்கொள்வதை பார்ப்பனர்கள் ஏன் தடை செய்தார்கள் என்பதன் காரணத்தைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். ஏனெனில், அது பெண்களின்பாலான பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது. இது, புத்தரின் கண்ணோட்டத்திற்கு நேர் எதிரானதாகும். இதற்கான காரணத்தை மநு இவ்வாறு கூறுகிறார் :
IX 18 : வேதங்களைப் படிப்பதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை. அதனால்தான் அவர்களின் சடங்குகள் வேத மந்திரங்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன. மதத்தைப் பற்றி பெண்களுக்கு எந்த அறிவும் கிடையாது, ஏனெனில், வேதங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை உச்சரிப்பது பயனுள்ளதாகும். பெண்களால் வேத மந்திரங்களை உச்சரிக்க முடியாததால் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள்.
மநு, புத்தருக்குப் பின்னர் தோன்றியவராக இருந்தபோதிலும், அவர் பழைய தர்ம சூத்திரங்களில் கூறப்பட்டுள்ள பழைய கருத்தை விளம்பியுள்ளார். பெண்களைப் பற்றிய இக்கருத்து இந்தியப் பெண்களை அவமானப்படுத்துவதாகும். ஏனெனில், ஒவ்வொரு மனிதப் பிறவியின் பிறப்புரிமையான அறிவு பெறும் உரிமை, எவ்வித நியாயமுமின்றி பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. அது ஓர் அவமானமாகும். ஏனெனில், அறிவு பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்ட பின்னர், அறிவு இல்லாத காரணத்தால் ஒரு பெண் பொய்யைப் போன்று அசுத்தமானவள் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால், பிரம்மத்தை அடைவதற்கான ஒரு பாதையாகக் கருதப்பட்ட துறவறத்தை ஏற்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. தனது ஆன்மீக உள்ளாற்றலை எய்துவதற்குள்ள உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது மட்டுமின்றி, பெண் எத்தகைய ஆன்மீக உள்ளாற்றலும் அற்றவர் என்று பார்ப்பனர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.
இது, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையான ஓர் அநீதியாகும். இதற்கு ஈடிணையே இல்லை. பேராசிரியர் மாக்ஸ் முல்லர் கூறியது போன்று, “மனிதப் பிறவி தெய்வத் தன்மையிலிருந்து எவ்வளவு தொலைவிலிருந்தபோதிலும், இந்த உலகில் மனிதனை விட வேறு எதுவும் கடவுளுக்கு சமீபமாக இல்லை. உலகில் மனிதனைத் தவிர வேறு எதுவும் கூடுதல் தெய்வத் தன்மை வாய்ந்ததாக இல்லை.'' இது மனிதன் (ஆண்) விஷயத்தில் உண்மையெனில், பெண் விஷயத்தில் இது ஏன் உண்மையாக இருக்கக்கூடாது? இதற்கு பார்ப்பனர்களிடமிருந்து பதில் இல்லை.
துறவற வாழ்க்கையில் பெண்களை அனுமதித்ததன் மூலம் புத்தர், ஒரே அடியில் இவ்விரு அநீதிகளையும் அகற்றினார். அவர் பெண்களுக்கு அறிவு பெறும் உரிமையை வழங்கியதோடு, ஆண்களோடு கூடவே ஆன்மீக உள்ளாற்றல்களை எய்துவதற்கான உரிமையையும் பெண்களுக்கு அளித்தார். இந்தியாவில் இது ஒரு புரட்சி மட்டும் அல்ல; பெண்களின் விடுதலையுமாகும். இது குறித்து பேராசிரியர் மாக்ஸ் முல்லர் இவ்வாறு கூறுகிறார் :
“பழைய பார்ப்பனிய சட்டத்தின் சிறுமைப்படுத்தும் விலங்குகள் கடைசியாக உடைக்கப்பட்டன என்று இந்தியாவின் வரலாறு நமக்கு கூறுகிறது. ஏனெனில், புத்த மதத்தில் தனிநபர் சுதந்திரம், குறிப்பாக, சமூகத்தின் தடைகளை உடைத்துக் கொண்டு எழும் உரிமை, விரும்பும்போது காட்டுக்குள் சென்று ஒரு செம்மையான ஆன்மீக சுதந்திர வாழ்க்கையை வாழ்வது ஆகிய உரிமைகள் அறுதியிட்டுக் கூறப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை.''
– தொடரும்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 118
-0-

25.புத்தர், பெண்களை அதிகாரத்தில் அமர்த்துவதை வரவேற்றார் – V

குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகள் ஒரு புறமிருக்க, பெண்களைப் பற்றி புத்தரின் பொதுவான கண்ணோட்டம் என்னவாக இருந்தது என்பதை இப்பொழுது நாம் பார்ப்போம். புத்தர், பெண்களைத் தாழ்வாக மதித்தாரா? பவுத்தர்களின் புனித இலக்கியங்களைப் படிப்பவர்கள், பெண்களைப் பற்றி புத்தர் குறிப்பிடும் இடங்களில் எல்லாம், பெண்களை இழிவுபடுத்துவதாகக் கருதப்படும் எதையும் கூறுவதற்கு பதில், பெண்ணை புத்தர் எப்பொழுதும் பெருமைப்படுத்துவதற்கும், உயர்த்திக் கூறுவதற்குமே முயன்றுள்ளார் என்பதை நன்கு உணர்ந்து தெளிவு பெறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தக் கருத்துக்கு ஆதரவாக, நான் ஒரு சில எடுத்துக்காட்டுகளை கூற விரும்புகிறேன்.
பண்டைக் காலத்திலிருந்து, இந்திய மக்கள் பொதுவாக, பெண் குழந்தை பிறப்பதை ஒரு கெடுவாய்ப்பாகவே கருதி வந்துள்ளனர். இந்த மனோபாவம் புத்தருக்கு இருந்ததா? இப்பிரச்சனை தொடர்பான புத்தரின் கண்ணோட்டம், மரபான கண்ணோட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். பிரசேனாஜித் மன்னருக்கு அவர் அளித்த அறிவுரையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஒருமுறை மன்னர் பிரசேனாஜித், ஸ்ராவஸ்தியில் ஜேடாவின் தோட்டத்தில் புத்தரை காணச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் அரண்மனையிலிருந்து ஒரு தூதர், அவருடைய மனைவியான அரசி மல்லிகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் தெரிவித்தார். இச்செய்தியை கேட்டதும் மன்னருடைய முகம் மாற்றமடைந்து, அவர் சோகமாகவும் விரக்தியடைந்தவராகவும் காணப்பட்டார். அவருடைய முகத்தில் மாற்றத்தைக் கண்ட புத்தர், அதற்கான காரணத்தை வினவினார். இதற்கான காரணம் கூறப்பட்டதும் புத்தர், “ஏன் வருத்தப்படுகிறீர்கள்? ஒரு பெண் குழந்தை, ஓர் ஆண் குழந்தையைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்கக்கூடும். ஏனெனில், அவள் விவேகமும் ஒழுக்கமும் நிறைந்தவளாக வளர்வாள். அவள் பெற்றெடுக்கும் மகன் மகத்தான செயல்களைப் புரிந்து, பெரும் ராஜ்ஜியங்களை ஆட்சி புரியக்கூடும்...’ என்று கூறினார்.
சில குடும்பங்கள் ஏன் உயர்வடைகின்றன, சில குடும்பங்கள் ஏன் சீரழிகின்றன என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், புத்தர், பிக்குகளுக்கு இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது :
“எத்தகைய குடும்பங்கள், துறவிகளாக இருந்தாலும், பெரும் செல்வங்களை அடைந்த போதிலும் அவை நீண்ட காலம் இருப்பதில்லை. ஏனெனில், இழந்தவற்றைத் திரும்பப் பெறுவதற்கு அவர்கள் முயல்வதில்லை. சீரழிந்தவற்றை மேம்படுத்துவதற்கு அவர்கள் முயல்வதில்லை. அவர்கள் மிகையாக உண்கிறார்கள், குடிக்கிறார்கள், ஒழுக்கங்கெட்ட ஒரு பெண்ணையோ அல்லது ஓர் ஆணையோ அவர்கள் அதிகாரத்தில் அமர்த்துகிறார்கள். எத்தகைய குடும்பங்களாயினும் அவையெல்லாம் நீடித்திருக்க முடியாமல் போவதற்கு, இந்த நான்கே காரணங்களாகும் அல்லது இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் ஆகும்.
“பல குடும்பங்கள், துறவிகள் நீண்டகாலம் நீடித்திருப்பதற்குக் காரணம், அவர்கள் இழந்ததைத் திரும்பப் பெறுவதற்கு முயல்கின்றனர், சீரழிந்ததை மேம்படுத்துவதற்கு முயல்கின்றனர், மிதமாக உண்கின்றனர், குடிக்கின்றனர்; மற்றும் நற்பண்புள்ள ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ அதிகாரத்தில் அமர்த்துகின்றனர். எத்தகைய குடும்பங்களாயினும் அவை நீண்ட காலம் நீடித்திருப்பதற்கு, இந்த நான்கும் காரணங்களாகும் அல்லது இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினாலாகும்.’
ஒரு மன்னர், சக்கரத்தைச் சுழற்றுபவர், அதாவது ஒரு மாமன்னராக விரும்பும் ஒருவர், இந்த உலகில் தோன்றும் போது என்ன ஏற்படுகிறது என்று பிக்குகளுக்கு விவரித்துக் கூறுகையில், புத்தர் அவர்களிடம் இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது: “அத்தகைய ஒரு மன்னர் தோன்றும் போது ஏழு செல்வங்களும் தோன்றுகின்றன. சக்கரம், குதிரை, அணிகலன், பெண், வீட்டின் – தந்தை மற்றும் வாரிசு என்ற செல்வமும் தோன்றுகின்றனர்.’
மற்றொரு சந்தர்ப்பத்தில் புத்தர், பெண்ணின் மதிப்பைப் பற்றி உலகிற்கு கூறுகையில் இவ்வாறு குறிப்பிட்டார் : “பெண் மிக உயர்வான பொருளாகும்; அவள் இன்றியமையாத பயன்பாடு கொண்டவள். ஏனெனில், அவள் மூலமாகவே போதி சத்வர்கள் மற்றும் உலக ஆட்சியாளர்கள் (மன்னர்கள்) பிறக்கின்றனர்.’
ஒரு பெண் குழந்தையின் பிறப்பு, துயரமடைவதற்கான சந்தர்ப்பமல்ல, மகிழ்ச்சியடைவதற்கான ஒரு சந்தர்ப்பம் என்று கருதியவரை; தங்களுடைய விவகாரங்களுக்கு ஒரு பெண்ணை அதிகாரத்தில் அமர்த்தி, குடும்பங்கள் வீழ்ச்சியடைவதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியவரை; பெண்ணை ஏழு செல்வங்களில் ஒருவர் என்று தயக்கமின்றி வர்ணித்தவரை; பெண் ஆக உயர்ந்த மதிப்புடைய பொருள் என்று கூறியவரை – பெண்களை வெறுப்பவர் என்றும் ஏளனமாகக் கருதுபவர் என்றும் எவ்வாறு கூற முடியும்? இந்தக் கூற்றுக்கள் பெண் வர்க்கத்தின்பால் புத்தர் கொண்டிருந்த பொதுவான மனோபாவங்களின் மாதிரிகளாகும். அவை பெண்ணை ஏளனம் செய்வதையும், இழிவு படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கூறப்பட்டவை என்று எவராவது கூற முடியுமா?
 – தொடரும்
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(2), பக்கம்: 117)
-0-
cont




























































































sekar-------------------------------